கண்ணாயிரம் செய்த யோகாசனம்/சிறுகதை/தபசுகுமர்
1 min readKannayiram seytha Yogasanas / Short Story / Tapasukumar
போலீஸ் நிலையத்திலிருந்து சைக்கிளை மீட்டு வந்த கண்ணாயிரம் அந்த சைக்கிளில் டயர், டியூப் இல்லாததால் மிகவும் கவலையில் இருந்தார். வெளியில் எங்கும் போகவில்லை. எங்கு போனாலும் பிரச்சனை வந்துவிடுகிறது என்ற பயம். வீட்டுக்குள்ளே சுற்றிசுற்றி வந்தார். அவருக்கு லேசாக தொந்தி இருப்பது போல் தெரிந்தது. அதை பார்த்த கண்ணாயிரம் இதை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று நினைத்தார். காலையில் டிவியில் யோகாசனம் செய்வது எப்படி என்று ஒரு பெண் விளக்கினார். கண்ணாயிரம் அதை கண் இமைக்காமல் பார்த்தார். ஒரு நோட்டில் குறித்து கொண்டார். தொந்தி குறை யோகாசனம் செய்வது முடிவு செய்தார் . அன்று அதிகாலையில கண்ணாயிரம் விழித்துவிட்டார். வீட்டின் முன் அறையில் டிவி பக்கத்தில் தரையில் ஒரு துணியை விரித்தார். டிவியில் யோகாசன காட்சி ஒளிபரப்பானது. அதில் வருவது போல் கண்ணாயிரம் யோகாசனம் செய்யத் தொடங்கினார். அவரது மனைவி அவரை ஆச்சரியமாகப் பார்த்தார். உடனே கண்ணாயிரம் அதிக உற்சாகமாக கையையும் காலையும் வேகமாக அங்கும் இங்கும் தூக்கினார். அவர் மனைவி எச்சரித்தார். கை, கால் பிடிச்சிகிடும் என்றார்.
கண்ணாயிரம் கேட்பதாக இல்லை. யோகாசனம் செய்வதில் பெரிய நிபுணர் என்று நினைத்துக் கொண்டு கழுத்தை அங்கும் இங்கும் திருப்பினார். மனைவியை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்து விட்டு வேகவேகமாக கழுத்தை அசைத்தார். அவரது மனைவிக்கு பயமாக இருந்தது. கழுத்தை வேகமாக அசைக்காதீங்க என்று அச்சத்துடன் கத்தினார். கண்ணாயிரம் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் கழுத்தை வேகமாக அசைத்த போது மளுக்கென்று ஒருசத்தம் கேட்டது. என்ன சத்தம் என்றவாறு கண்ணாயிரம் கழுத்தை திருப்ப முயன்றார் முடியவில்லை. கழுத்து என்ன ஆச்சு இங்கே பார்த்து சொல்லுங்க என்றார் அவரது மனைவி. கண்ணாயிரம் கோபமாக அங்கெல்லாம் பார்க்க முடியாது. நீ இந்தபக்கமாவா என்று மெல்லிய குரலில் சொன்னார். என்ன ஆச்சு உங்களுக்கு என்று அவரது முகம் திரும்பி இருந்த பக்கத்துக்கு அவரது மனைவி வந்தார். கழுத்தை திருப்ப முடியலை டி இப்போது என்ன செய்வது என்று கண்கலங்கினார். நான் அப்போதே சொன்னேன் நீங்க கேட்கல. இப்போது என்ன பண்ணுறது. நான் உங்க கழுத்தை பிடிச்சு மெல்ல திருப்பிவுடுறேன். என்று கண்ணாயிரத்தின் கழுத்தை அவர் திருப்ப முயன்றார். கண்ணாயிரம் அய்யா, அம்மாஎன்றுகத்தினார். அவரது அலறல் சத்தம் தெருவெல்லாம் கேட்டது. என்னமோ ஏதோ என்று அக்கம்பக்கதில் உள்ளவர்கள் அங்கே ஓடிவந்தார்கள். என்ன கண்ணாயிரம் அண்ணஎன்ன ஆச்சு, புருசன் பொண்டாட்டிக்குள்ள சண்டையின்னா இப்படியா அடிக்கிறது. கழுத்தை திருப்ப முடியாத அளவுக்கு தாக்கிறதா என்று கண்ணாயிரம் மனைவியை கண்டித்தார்கள். கண்ணாயிரத்துக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இருக்கிற வேதனையில் இதுவேறயா. சும்மா இருங்கய்யா என்றார். அவர்கள் விடுவதாக இல்லை. நீங்க சும்மா இருங்கய்யா என்றார். அவர்கள் கேட்பதாக இல்லை. நீ ங்க சும்மா இருங்கண்ண கோபம் என்றாலும் இப்படியா கழுத்தை திருப்பிவிடுறது என்று காரசாரமாக பேசினர். கண்ணாயிரம் மனைவி அவர்களை முறைத்தார். அவர்கள் உடனே என்ன முறைக்கிறீங்க. படாத இடத்திலே பட்டிருந்தா என்ன ஆவது. என்று ஆளாளுக்கு ஒன்றை சொன்னார்கள். கண்ணாயிரத்துக்கு ஆத்திரமாக வந்தது. ஏங்ககொஞ்சம் அமைதியாக இருக்க மாட்டார்களா. எனக்கு வலிதாங்க முடியலேஎன்றார்.
அவர்கள் கண்ணாயிரத்தை பார்த்து இவர் வலிதாங்காமல் எப்படி துடிக்கிறார். அந்த அம்மா எதுவும் செய்யாத மாதிரி கம்முன்னு இருக்கு பாருங்க என்றனர். கண்ணாயிரம் நடந்ததை சொல்வார் என்று அவரது மனைவி எதிர்பார்த்தார். ஆனால் கண்ணாயிரம் எப்படி சொல்லுறது என்று தெரியாமல் வலியால் துடித்தார். அப்போது ஒருவர் கண்ணாயிரம் அண்ணே கழுத்தை திருப்ப முடியலேயே பின்னர் எப்படி டிவி பார்ப்பீங்க, எப்படி சாப்பிடுவீங்க என்று பரிதாபமாக கேட்டார். அது ஒண்ணுதான் குறைச்சல் வலிதாங்க முடியல அய்யா கொஞ்சம் சும்மா இருக்கீயளா என்றுகண்ணீர் மல்க கேட்டார். அப்போது ஒரு பெரியவர், உங்களுக்குள் என்னசண்டை சொல்லு தீர்த்து வைக்கிறோம்.. நள்ளிரவில் சண்டை வந்தா எங்களால் எழுந்து வந்து சண்டையை விலக்க முடியாது என்றார்.
கண்ணாயிரத்துக்கு உடம்பு வியர்த்தது. இப்படியே விட்டா பிரச்சினையை பெரிதாக்கிவிடுவார்களோ என்றுபயந்தார். இந்தாபாருங்க எங்களுக்குள் எந்த பிரச்சினையும் கிடையாது. தொந்தி குறைய டிவி பார்த்து யோகாசனம் செய்தேன். அதில் கழுத்து திரும்பிக்கிட்டு அவ்வளவுதான் என்றார் கண்ணாயிரம். ஆனால் அவர்கள் நம்பவில்லை. கண்ணாயிரம் நீ உன் மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசலாம். தொந்தி குறையணுமுன்னா வயிற்றுக்கு தானே பயிற்சி கொடுக்கணும், கழுத்தை திருப்ப வேண்டிய அவசியம் இல்லையே என்றார் ஒரு பெரியவர். அவரை மற்றவர்கள் பாராட்டினார்கள். நல்லா கேட்டீங்க பெரியவரே என்றனர். கண்ணாயிரம் பற்களை கடித்தார். அய்யா தெரியாம தலையை ஆட்டிப்புட்டேன் என்னைவுட்டுடு ங்கய்யா என்று கையை எடுத்து கும்பிட்டார். கண்ணாயிரம் மனைவி மேலே குற்றம் சொல்ல மாட்டார் வாங்கடா போவோம் என்று அனைவரும் புறப்பட்டார்கள். கண்ணாயிரம் நிம்மதி பெருமூச்சுவிட்டார். அம்மாடி விட்டா குடும்பத்தையே பிரிச்சுடுவாங்கபோல என்றார். அவரது மனைவி அடக்கிவைத்த கோபத்தை எல்லாம்கொட்டித்தீர்த்தார். கண்ணாயிரம் சத்தம்போடாதே போனவங்க திரும்பி வந்திடப் போறாங்க என்றார். அவரது மனைவி ஆமா ஆமா வந்தாலும் வந்துருவாங்க எங்கே பிரச்சினை வராதா என்றுபார்த்து கொண்டிருப்பார்கள். வாங்க, ஆஸ்பத்திரிக்கு போவோம் டாக்டருக்கிட்ட காட்டுவோம் மருந்துதடவினா சரியாகிவிடும் என்றார். சரி என்று கண்ணாயிரத்தால் தலையை ஆட்ட முடியவில்லை. ம்… என்றார். பின்னர் கணவன் மனைவி இருவரும் ஆட்டோவில் ஏறி ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
=வே.தபசுக்குமார்