கண்ணாயிரம்சென்றவாக்கிங்/ சிறுகதை/ தபசுகுமார்
1 min readKannayiram Walking / Short story by thabasukumar
டிவியை பார்த்து யோகாசனம் செய்த கண்ணாயிரத்தின் கழுத்து பிடித்துக் கொண்டது. கழுத்தை திருப்ப முடியாமல் அவதிப்பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் வீட்டுக்கு வந்தார். கழுத்து வலி கொஞ்சம் குறைய தொடங்கியது. ஆனாலும் அவரால் டிவி பார்க்க முடிய வில்லை. செய்திகள் மட்டும் கேட்டுக்கொண்டார்.. வீட்டில் ஓய்வெடுத்தார். கழுத்து வலி நீங்கியது. அதேநேரத்தில் தொந்தி பெரிதாகிவிட்டது. அதைப் பார்த்து அவருக்கு வருத்தம் ஏற்பட்டது. என்னடா இது பெரிய தொந்தரவாக இருக்கிறதே. இதை எப்படி குறைக்கலாம் என்று சிந்திக்க தொடங்கினார். அவர் மனதில் பலதிட்டங்கள் வந்து போனது. ஆனால் எல்லாம் சைடுஎபக்ட் உள்ளதாக இருந்தது.
அன்று அதிகாலையில் எழுந்துவிட்டார். வீட்டுக்கு வெளியே நிறைய பேர் வேகமாக நடந்து சென்றார்கள். கண்ணாயிரம் தன் மனைவியிடம் எங்கே இவ்வளவு வேகமாக போறாங்க என்று கேட்டார். அதற்கு அவர், வாக்கிங் போறாங்க, வாக்கிங். உடம்பு குறையணுமல்ல, அதான் போறாங்க என்றார்.
கண்ணாயிரம் அப்பாவியாக வாக்கிங் போனா தொந்தி குறையாதா என்று கேட்டார். அவர் மனைவி கோபமாக வருடம் புல்லா போறாங்க எதுவும் குறைந்த மாதிரி தெரியலை என்றார்.
கண்ணாயிரம் விடவில்லை. அது ஏன் குறையலை என்று மீண்டும் கேட்டார். அது ஏன் உங்களுக்கு கவலை. அதையே ஏன் கேட்கிறீங்க என்று அவர் மனைவி மடக்கினார்.
கண்ணாயிரம் அமைதியானர்.
மனதுக்குள் நாமும் வாக்கிங் போயி பார்ப்போம் தொந்திகுறையுதா என்று பார்ப்போம் என்று முடிவெடுத்தார். அதை மனைவியிடம் சொல்லவில்லை. அப்படி சொன்னால் வாக்கிங் செல்ல தடை உத்தரவு போட்டுவிடக் கூடாது என்று பயந்தார். இரவு எல்லாம் அவருக்கு வாக்கிங் கனவாகவே வந்தது.
அதிகாலையில் கண்ணாயிரம் எழுந்தார். அவரது மனைவி என்ன காலையிலே எழுந்திட்டிய ஆறு மணிக்கு எந்திரிங்க. உங்களுக்கு ஒருகசாயம் வைச்சுத் தர்ரேன். குடிங்க. வயிற்றில் உள்ளது எல்லாம் வெளியே வந்திடும். தொந்தி குறைந்துவிடும் என்றார். கசாயம் என்றவுடன் கணாயிரத்துக்கு பக் என்றது.
என்ன கசாயமா அது ரொம்ப கசக்குமே வேறு மருந்து இல்லையா என்று வருத்தத்துடன் கேட்டார். உடனே மருந்துன்னா கசக்கத்தான் செய்யும் சும்மா இனிக்கவா செய்யும் என்று அவரது மனைவி அதட்டினார். சத்தம் போடாதே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்திடப்போறாங்க என்று கண்ணாயிரம் எச்சரித்தார்.
சரி, சரி பேசாம இருங்க கசாயம் ரெடிபண்ணிட்டு வர்ரேன் என்று அவரது மனைவி சமையல் அறைக்கு போனார்.
அந்தநேரத்தில் கண்ணாயிரம் வாக்கிங் செல்ல முடிவு செய்தார். வேறு டிரஸ் போட்டால் மனைவி கண்டுபிடித்து விடுவார் என்று நினைத்தார். உடனே ஒரு லுங்கி பனியனுடன் கண்ணாயிரம் மெல்ல வீட்டைவீட்டு புறப்பட்டார். வீதியில் நிறைய பேர் வாக்கிங் போய் கொண்டிருந்தார்கள். கண்ணாயிரம் ஆச்சரியமாக பார்த்தார். யாருக்கு பின்னால் வாக்கிங் போவது என்று தெரியாமல் திணறினார்.
அப்போது வெள்ளை அரைரகால் சட்டை பனியன் அணிந்த ஒருவர் கயிற்றில் அழகான நாய்குட்டி ஒன்றை பிடித்தபடி வேகமாக நடந்து சென்றார். அவரைப் பார்த்ததும் கண்ணாயிரத்துக்கு மகிழ்ச்சி. அவருக்கும் தொந்தி இருந்தது. அவர் நடப்பது போல் நாமும் நடந்தால் தொந்தி குறையும் என்று நினைத்தார். அவருக்கு உற்சாகம் பொங்கியது.அவருக்கு பின்னால் வேகமாக நடந்தார். வெள்ளை கால்சட்டை போட்டவர் தன்னை ஒருவர் பின் தொடர்ந்து வருவதாக நினைத்தார். கண்ணாயிரம் லுங்கி அணிந்து வந்ததால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. வேகமாக சென்றவர் அப்படியே நின்றார். கண்ணாயிரமும் அப்படியே நின்றார். வெள்ளைகால் சட்டைபோட்டவர் மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அதை பார்த்து கண்ணாயி மும் அவரைப் போல் நடக்கத் தொடங்கினார். வெள்ளைக்கால் சட்டை போட்டவருக்கு ஏற்கனவே மர்ம மனிதர்களின் மிரட்டல் இருந்தது. எனவே லுங்கியுடன் பின்தொடர்ந்த கண்ணாயிரத்தை தன்னை கொல்ல வந்த மர்ம மனிதன் என்று நினைத்து விட்டார். கண்ணாயிரத்தை கோபமாக பார்த்தார். கண்ணாயிரமோ அவரைப் பார்த்து சிரித்தார். வெள்ளக்கால் சட்டை போட்டவருக்கு வியர்த்தது. என்ன புதிய வில்லன் போல் சிரிக்கிறான். பிடிச்சி போலீசிலே கொடுத்து விட வேண்டியதுதான் என்று நினைத்தார். அவர் வாக்கிங் போகாமல் அங்கே நின்றது கண்ணாயிரத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரிடமே கேட்டுவிடலாமா என்று நினைத்தார்.
மெல்ல அவரை நோக்கி விரைந்தார். வெள்ளக்கால் சட்டை போட்டவருக்கு பயம்அதிமாகியது.
ஐ ஜிம்மி கேட்ச், ஜிம்மி கேட்ச் என்று கத்தினார். உடனே அது கண்ணாயிரத்தை நோக்கி பாய்ந்தது.
சார் நாயை பிடிங்க என்று கத்தினார் கண்ணாயிரம்.
ஆனால் வெள்ளக்கால்சட்டை போட்டவர் அதைகேட்க வில்லை.
ஜிம்மி விடாதே பிடி என்று வேகமாக கத்தினார். உடனே கண்ணாயிரம் உஷரானார். லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தார். ஜிம்மி அவரை பின் தொடர்ந்து விரட்டியது. கண்ணாயிரம் சளைக்கவில்லை. மூச்சை பிடித்துக் கொண்டு ஓடினார். ஓட்டப் பந்தயம் போல் இருந்தது. கண்ணாயிரம் சிறிது மூச்சு வாங்கினார். தன்னை ரட்டி வந்த நாய்குட்டி மீது ஒரு கல்லை எடுத்து வீசினார். பின்னர் மீண்டும் ஓடினார். நாய் குட்டி ஆவேசமாக கண்ணாயிரத்தின் மீது பாய்ந்து அவர துலுங்கியை கடித்து இழுத்தது. கண்ணாயிரம் அருகில் கிடந்த கம்பை எடுத்து நாய் குட்டியை தாக்கினார். அது ஆவேசமாக கண்ணாயிரத்தின் காலில் கடித்து இழுத்தது. அய்யோ கடிச்சிட்டே என்று கண்ணாயிரம் கத்தினார். நாய்குட்டி தன் திட்டம் நிறைவேறியதும் நாக்கை தொங்க விட்ட படி மூச்சு வாங்கியது. வெள்ளக்கால் சட்டை போட்டவர் வேகமாக அங்குவந்தார். கண்ணாயிரத்தை பார்த்து என்ன மேன் நீ கூலிபடையை சேர்ந்தவன் தானே என்று மிரட்டினார்.
கண்ணாயிரம் அதிர்ச்சியுடன், என்னயா கூலிப்படையா, நான் கூலிக்கு வேலை செய்யுற தொழிலாளி அய்யா என்று கண்ணீர் மல்க கூறினார். வெள்ளக்கால் சட்டை போட்டவர் கண்ணாயிரத்தை பார்த்து, உண்மையை சொல்ல வேண்டியது தானேமேன், லுங்கிகட்டிக்கிட்டு என்ன ஏன் பின் தொடர்ந்து வந்தே மேன் என்று கோபமாக கேட்டார். கண்ணாயிரம் மெல்லிய குரலில், தொந்தி குறையுறதுக்காக உங்களை பின் தொடர்ந்து வாக்கிங் வந்தேன் அது தப்பா என்று கேட்டார்.
அதற்கு அவர், மேன் நீ லுங்கி உடுத்திக்கிட்டு திருட்டு முழி முழிச்சிக்கிட்டு வந்ததுதான் தப்பு எனறார். கண்ணாயிரம் அவரிடம் அவசரமாக வந்ததால் லுங்கி உடுத்துக்கொண்டு வந்திட்டேன். சாதாரணமாகவே என்முழி அப்படித்தான் என்ன செய்யுறது என்று நொண்டியபடி வீட்டுக்கு நடந்தார். என்ன மேன் ஆஸ்பத்திரிக்கு போய் ஊசிபோட்டுக்க பிரச்சினையாகி விடும். உனக்கு குடிப் பழக்கம் எதுவும் உண்டா என் செல்ல நாய்க்கு ஊசி போடணும். எதுக்கும் உன் அட்ரசை கொடுமேன். என்றார் வெள்ளக்கால் சட்டை போட்டவர். கண்ணாயிரம் அவரை முறைத்தார். அட்டரசை கேட்கிறாரு அட்டரசு போய்யா போ நானே நாய் கடிச்சதை மனைவியிடம் எப்படி மறைப்பது என்றுதெரியாமல்விழிக்கிறேன் இவர் வேற கஷ்டப்படுத்துறாரு என்று புலம்பியபடி வீட்டுக்கு போனார்
-வே. தபசுக்குமார், புதுவை