18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி போடுவதில் சிக்கல்
1 min readTrouble getting vaccinated tomorrow for people over 18 years old
30/4/2021
மத்திய அரசு மே 1-ந்தேதி முதல் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட பிரிவினரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதில் சிக்கல்
கொரோனா தடுப்பூசி
புதுடெல்லி:
18 வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாளை தொடங்குவதாக இருந்தது. ஆனால் நாளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் இதுவரை 15 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று 3 கட்டங்களாக தடுப்பூசிகள் போடும் பணி நடந்தது.
தடுப்பூசியை குறிப்பிட்ட கால இடைவெளியில் 2 தவணைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு விட்டது. 2-வது தவணை தடுப்பூசி போடும் பணிகளில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 2-வது தவணை தடுப்பூசி போடும் பணி மெல்ல நடந்து வருகிறது.
18 வயதுக்கு மேல்..
இந்தநிலையில் மத்திய அரசு மே 1-ந்தேதி முதல் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட பிரிவினரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும்பணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. கடந்த 28-ந் தேதி இதற்கான முன்பதிவு தொடங்கியது. இதனையடுத்து 1 கோடியே 33 லட்சம் பேர் முன்பதிவு செய்தனர். நேற்று 2-வது நாளாக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பணி நடைபெற்றது.
நேற்று இரவு 10.15 மணி வரை நாடுமுழுவதும் 96 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்தனர். இதன்மூலம் கடந்த 2 நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு 2 கோடியே 30 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இன்று 3-வது நாளாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
2 கோடிக்கும் மேல்
இதுவரை ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை எந்த தேதியில், எந்த மருத்துவமனையில் தடுப்பூசி போடலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. சில மாநிலங்களில் மட்டும் தகவல் பரிமாற்றம் நடைபெற்று உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் முன்பதிவு மட்டுமே செய்யப்பட்ட நிலையில் நாளை தடுப்பூசி போடும் பணி தொடங்குமா என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது.
தொடங்க இயலாது
தடுப்பூசி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நாளை இந்த திட்டத்தை தொடங்க இயலாது என்று பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, அசாம், மேற்கு வங்காளம், பஞ்சாப், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நாளை (மே 1) தடுப்பூசி போடும் பணியை தொடங்க இயலாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளன.
இந்த 8 மாநிலங்களும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஒரு வாரம் கழித்து தான் தொடங்க இயலும் என்று கூறி உள்ளன. சில மாநிலங்கள் தற்போதைக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்க இயலாது. அதற்கு ஒரு மாதத்துக்கு மேல் ஆகலாம் என்று கூறி உள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடித்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறி உள்ளன.
டெல்லி, தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் இதேநிலைதான் நீடிக்கிறது. எனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாளை அறிவித்தபடி தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.