சாமிக்கு பாலாபிஷேகம் செய்வது கன்றுக்கு செய்யும் துரோகமா?
1 min readIs Balabhishekam to Sami a betrayal of the calf?
பசுவானது தனது குட்டிக்காக பாலை மடுவில் தாங்கி நிற்கிறது. அதை மனிதன் கறந்து குடிப்பது அந்தக் கன்றுக்குட்டிக்கு செய்யும் துரோகம் அல்லவா? அப்படி கொள்ளையடித்து குடித்துவிட்டு… பசுவை ஒரு தாய்க்கு ஈடாக புகழ்கிறோம். பசுவானது தானாகவா பாலைத் தருகிறது?
காலையிலும் மாலையிலும் கன்றானது தனது தாய் மடுவில் ஒருசில நிமிடம் மட்டுமே வாய் வைக்க அனுமதிப்போதும். அதன்பிறகு அதை வலுக்கட்டாயமாக இழுத்து கட்டிப்போட்டுக் கொள்கிறோம். மடுவில் உள்ள பால் அனைத்தையும் கறந்து விடுகிறோம். அதன்பின் கன்றுக்குட்டியை குடிக்க விடுகிறோம்… சில பசுக்கள் பாலை எக்கி வைத்து கறந்து முடித்தப்பின்னர் குட்டிக்கு கொடுக்கிறது.
பசுவின் பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சத்தான உணவாக பயன்படுகிறது. குறிப்பாக தாய்ப்பால் கிடைக்காத குழந்தைக்கு உயிர்காக்கும் மருந்தகாக விளங்கிறது.
அந்த பாலில் இருந்த தயிர், மோர்,நெய்மட்டுமின்றி பால்கோவா, பால் பவுடர், பன்னீர் போன்றவை யும் தயாரிக்கிறார்கள்
இப்படி வன்மையாக கறந்த பாலை மனிதன் பல்வேறு விதங்களில்பயன்படுத்துகிறான்.
அந்தப் பாலைத்தான் சாமிக்கும் அபிஷேகம் செய்கிறார்கள். அதாவது யாருக்கோ உரிய பாலை வலுக்கட்டாயமாக கறந்து சாமிக்கு அபிஷேகம் செய்வது நியாயமா? அந்தக் கடவுளே கன்றுக்காகத்தானே தாயின் மடுவில்பாலை சுரக்கச் செய்கிறார். அப்படி இருக்கையில் அந்தப் பாலை கறந்து அதே சாமிக்கு அபிஷேகம் செய்வது எப்படி நியாயம்?
-இப்படி எண்ணற்ற சந்தேகங்கள் மனதில் தோன்றும்.
இந்து மதத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாட்டு முறையிலும் அறிவியல் பூர்வமான தத்துவம் மறைந்து இருக்கும். அதை சரியாக புரியாமல் நாம் மூட நம்பிக்கை என்போம்.இன்னும் பல தத்துவங் &கள் புரியாமல் இருக்கலாம்.
பாலாபிஷேகம் செய்வதுகூட ஏழைகளுக்கும் அபிஷேகப்பால் கிடைக்கட்டும் என்ற ரீதியில் இருக்கலாம்.மேலும் சாமி சிலையில் மஞ்சள் போன்ற பல்வேறு மூலிகை களைக் கொண்டு அபிஷேகம் செய்த பின்னர் பாலை அபிஷேகம் செய்வார்கள். அப்போது அந்தப் பால் மருத்துவக்குணத்தைப் பெற்றுவிடுகிறது. அதன்பின் பஞ்சாமிர்த அபிஷேகம்… அதுவும் மருத்துவக்குணத்தை பெறுகிறது.
ஆனாலும் பசுவிடம் இருந்து பால் கறப்பத்தை எப்படி நியாயம் கற்பிக்க முடியும்?
இங்கே நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பசு அல்லது எருமை மாட்டிடம் இருந்துதான் பாலை கறந்து பயன்படுத்துகிறோம். ஆடு போன்ற மற்ற விலங்குகளிடம் இருந்து கறப்பது இல்லை. அதற்கும் காரணம் இருக்கிறது. மற்ற விலங்ககளை விட பசுவும் எருமையும் மட்டும்தான் தேவைக்கு அதிகமாக பாலை சுரக்கிறது.
குழந்தைப் பெற்ற பெண்கள் சிலருக்கு அதிகப்படியாக பால் சுரக்கும். அப்படி சுரக்கும்போது எல்லா பாலையும் தன் குழந்தைக்கு கொடுத்துவிடமாட்டாள். அளவுக்கு மிஞ்சினால்அமிர்தமும் விஷம்தான். அதேநேரம் பால் அதிகமாக கட்டினால் அந்த தாய்க்கு தாங்கொணா வலி ஏற்படும். அப்போது அதிகமான பாலை அந்தப் பெண் பீய்ச்சி எடுத்துவிடுவாள். இது பெண் இனத்தில் அபூர்வமாகத்தான் இருக்கும்.
ஆனால் மாடு இனத்தில் அப்படி அல்ல. பெரும்பாலான பசுக்கள், எருமைகள் அளவுக்கு அதிகமாகவே பாலை சுரக்கும். அந்தப் பால் முழுவதையும் கன்று குடித்துவிட்டால் அந்த கன்றுக்குட்டிக்கு தலை வீங்கி விடும்.
தற்போது கூட யார் வீட்டிலாவது தெரியாமல் அதிகமாக கன்றுக்குட்டி குடித்து தலை வீங்கி& விட்டால், அந்தக் கன்றுக்குட்டிக்கு தண்ணீரில் சோடா உப்பை கரைத்து குடிக்க கொடுப்பார்கள். அன்றைய தினம் வேறு உணவை கொடுக்க மாட்டார்கள். அப்படி செய்தால்தான் கன்று குணமாகும்.
பல்வேறு புராணங்களிலும் கோவில் தல வரலாற்றிலும் ஒன்றை நாம் கவனித்து இருப்போம். காட்டுக்கு மேயப்போகும் பசுவானது சிவலிங்கம் மறைந்து இருக்கும் இடத்தில் தானாக பாலை சுரப்பதாக படித்து இருப்போம்.
இலக்கிய காவியத்தில் கூட பசுகள் தண்ணீரில் தானாக பாலை சுரப்பதால் அந்த ஆறு பாலாறாக ஓடுவதாககுறிப்பிட்டு இருப்பார்கள்.
இதன் மூலம் அளவுக்கு அதிகமா£ன பாலை மாடுகூட தானாக வெளியே தள்ளிவிடும் என்பது புலனாகிறது. ஆக பசு தன் மடுவில் சுரக்கும் பால் முழுவதையும் கன்று குடிப்பது ஆரோக்கியமானது அல்ல என்பதுதானே உண்மை. அப்படி அதிகப்படியான பாலைத்தான் நாம் கறந்து பயன்படுத்துகிறோம். கோவிலுக்கும் கொடுக்கிறோம்.
இது பாவம் அல்ல. கன்றுக்கு செய்யும் துரோகம் அல்ல. மாறாக கன்றுக்கு செய்யும் நன்மைதான்.
அதேநேரம் தற்காலத்தில் கன்றுக்கு இல்லாமல் பாலை கறப்பதும், ஊசிப் போட்டு பாலை கறப்பதும் ஏற்கத் தக்கது அல்ல. அது கொடும் பாவம்.
-கடையம் பாலன்