May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

2 வாரங்களில் மீண்டும் சமையல் சிலிண்டர் விலை அதிகரிப்பு

1 min read

Cooking cylinder price increase again in 2 weeks

1.9.2021

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.25 உயர்த்தப்பட்டு உள்ளது. 2 வாரங்களில் மீண்டும் சமையல் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு கடந்த மே மாதம் முதல் மானியமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சமையல் எரிவாயு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிலிண்டர் ரூ.25 உயர்த்தப்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி விலை உயர்த்தப்பட்ட நிலையில் இரு வாரங்களுக்குள் 2-வது முறையாக சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

வர்த்தகரீதியான சிலிண்டர் விலையும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.75 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி டெல்லியில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.75 உயர்ந்து ரூ.1,693 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைக்கின்றன.

தொடர்ந்து உயர்வு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.610-ல் இருந்து ரூ.660 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 4-ம் தேதி ரூ.25-ம், பிப்ரவரி 15-ம் தேதி ரூ.50-ம் உயர்த்தப்பட்டது. பிப்ரவரி 25-ம் தேதி மீண்டும் ரூ.25, மார்ச் 1-ம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்டது. இதன்படி, ஒரு மாதத்துக்குள் சிலிண்டர் விலை ரூ.125 அதிகரிக்கப்பட்டது. பின்னர், ஏப்ரல் 1-ம் தேதி சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதத்தில் ரூ.25 உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களில் ரூ.50 அதிகரித்துள்ளது.

இதன்படி வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.884.50 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 3-வது மாதமாக காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் காஸ் சிலிண்டர் விலை ரூ.834 ஆக இருந்த நிலையில் இப்போது ரூ.884 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.190 அதிகரிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.884.50 ஆக உயர்ந்துள்ளது, இதற்கு முன் ரூ.859.50 ஆக இருந்தது. சென்னையில் இதற்கு முன் சிலிண்டர் விலை ரூ.875.50 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.900.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மானியம் நிறுத்தம்

சமையல் சிலிண்டர் மீதான விலையை ஒவ்வொரு மாதமும் உயர்த்துவதன் மூலம் மானியத்தை முற்றிலுமாக ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. இந்தத் தொடர் விலை உயர்வால் கடந்த ஆண்டு மே மாதத்தோடு மானியம் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த 7 ஆண்டுகளில் சமையல் சிலிண்டர் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு 14.2 கிலோ எடை கொண்டசிலிண்டர் ரூ.410.50 ஆக இருந்த நிலையில் தற்போது, ரூ.884 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.