சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழக்கு: லஞ்சஒழிப்பு போலீசாருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
1 min read
சசிகலா
Special facilities case for Sasikala: Karnataka High Court warns anti-corruption police
7.9.2021
‛‛சசிகலாவிடம் லஞ்சம் பெற்று சிறையில் சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்பு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடக மாநில தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும்,” என, கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
சிறையில் லஞ்சம்
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் இருந்தபோது லஞ்சம் பெற்று அவருக்கு சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து கர்நாடக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தவில்லை. இதனால் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த கீதா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவால் சசிகலாவுக்கு எதிராக இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை கடந்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
எச்சரிக்கை
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழக்கறிஞர் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்யநாராயணராவ் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிவு செய்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்காக காத்திருப்பதாகவும் வாதிட்டார்.
அப்போது, குற்றச்சாட்டு எழுந்து பல ஆண்டுகளாகியும் இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி பெறாதது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, 30 நாட்கள் கால அவகாசம் தருவதாகவும், அதற்குள் உரிய அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதில், தவறு ஏற்பட்டால் கர்நாடக தலைமை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.