May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

காதலியை 11 ஆண்டுகள் மறைத்து வைத்து வாழ்ந்த வாலிபர்

1 min read

A young man who has been hiding his girlfriend for 11 years

18.9.2021
வீட்டைவிட்டு ஓடிவந்த காதலியை 11 ஆண்டுகள் தன் வீட்டில் மறைத்து வைத்து வாழ்க்கை நடத்திய வாலியர், இப்போது பதிவு திருமணம் செய்து கொண்டார். அவர்களை நென்மாரா தொகுதி எம்.எல்.ஏ. பாபு நேரில் வாழ்த்தினார்.

பெண் மாயம்

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அய்லூரைச் சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகள் சஜிதா. இவர் கடந்த 2010ம் ஆண்டு வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினர். ஆனால், எங்கு தேடியும் அவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை.
இதனால் வேலாயுதன் நென்மரா போலீஸ் நிலையத்தில் தன் மகளை மீட்டுத் தருமாறு புகார் செய்தார். போலீசார் சஜிதாவை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

காதலன் வீட்டில்…

ஆனால், சஜிதா அதே பகுதியில் உள்ள காதலன் ரஹ்மான் என்பவருடன் அவரது வீட்டில் யாருக்கும் தெரியாமல் வசித்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தது ரஹ்மான் பெற்றோருக்கும் தெரியவில்லை. காலையில் வேலைக்கு செல்லும் ரஹ்மான் வீட்டில் சஜிதாவை வைத்து கதவை பூட்டிவிட்டு சென்றுவந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் வீட்டில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரஹ்மான் வீட்டில் இருந்து வெளியேறினார். இது குறித்து அவரது சகோதரர் பாலக்காடு நென்மாரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வந்தனர்.

கடந்த ஜூன் மாதம் ரஹ்மான் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இளம்பெண்ணோடு தனியாக வாழ்ந்து வருவதை அவரது சகோதரர் கண்டுபிடித்தார். இதுகுறித்து போலீசாருக்கும் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது ரஹ்மான் காதலி சஜிதாவுடன் கடந்த 11 ஆண்டுகளாக ரகசியமாக யாருக்கும் தெரியாமல் ஒரே அறையில் வசித்து வந்தது தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதியிடம் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியதை கோர்ட் ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்கியது.

திருமணம்

இந்த நிலையில் ரஹ்மான்-சஜிதா ஆகிய இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று நென்மாராவில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு இருவரும் வந்தனர். அங்கு சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்வதற்கான ஆவணத்தில் கையெழுத்து போட்டு திருமணம் செய்து கொண்டனர்.

11 ஆண்டுகள் ரகசிய வாழ்க்கை நடத்தி சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்ட ரஹ்மான்-சஜிதா தம்பதியரை நென்மாரா தொகுதி எம்.எல்.ஏ. பாபு நேரில் வாழ்த்தினார். மேலும் சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.