பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் ராஜினாமா
1 min readPunjab First-Minister Amarinder Singh resigns
18.9-.2021
பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். முன்னதாக அவர் சோனியாகாந்தியிடம் “இனியும் அவமானங்களைப் பொறுப்பதற்கில்லை” என்று கூறியுள்ளார்.
பஞ்சாப்
பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு உள்ளது.
தொடர் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக , கட்சியின் மாநிலத் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்.
எனினும், முதல்வர் அமரீந்தரை தனிப்பட்ட முறையில் விமர்சித்த சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒருதரப்பினர் பிடிவாதமாக இருந்தனர். அதன்பின், மாநில தலைவராக சித்து பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் அமரீந்தர் பங்கேற்றார்.
போர்க்கொடி
இந்நிலையில் முதல்வர் அமரீந்தருக்கு எதிராக சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலுடன் அமரீந்தர் கைகோத்து செயல்படுகிறார் என்று அதிருப்தி கட்சிக்குள் எழுந்தது.
ராஜினாமா?
இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் பதவியை கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அவர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
சோனியா காந்தியிடம் அவர் பேசுகையில் , இனியும் அவமானங்களைத் தாங்கிக் கொண்டு கட்சியில் நீடிக்க முடியாது என்று அமரீந்தர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் முதல்வர் அமரீந்தர் தனது ஆதரவாளர்களுடன் பஞ்சாப் இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரான அஜய் மாக்கென் கட்சி அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் கொடுத்தார்.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் மீண்டும் ஏற்படும் கிளர்ச்சி அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
அடுத்தது யார்?
அமரீந்தர் சிங் ராஜினாமா செய்யும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பத்திற்கு நம்பிக்கைக்கு உரியவராகவும் கருதப்படும் சுனில் ஜாக்கர் முதல்வராக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.