இந்தியாவில் புதிதாக 15,906 பேருக்கு கொரோனா; 561 பேர் சாவு
1 min readCorona for 15,906 newcomers in India; 561 deaths
24-10-2021
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 561 பேர் இறந்துள்ளனர்.
குறைந்து வரும் கொரோனா
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இதன்படி நேற்று 16,326 பேருக்கும் வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,906 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை 8 மணிவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15 ஆயிரத்து 906 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 8,909 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,75,468 ஆக அதிகரித்துள்ளது.
561 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 561 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,54,269 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.33 % ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 16,479 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,48,605 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.17 சதவீதம் ஆக உள்ளது.
மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,72,594 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 102.10 கோடி பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 77,40,676 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 13,40,158 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 59,97,71,320 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.