தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
1 min read
Heavy rain in 10 districts in Tamil Nadu today Opportunity
4.11.2021
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதாவது:-
லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 7-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான
மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியுள்ளார்.
அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்), சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை
நாளை (வெள்ளிக்கிழமை) டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், வட மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுதினம் (சனிக்கிழமை) நீலகிரி, கோவை, சேலம்,ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்பெய்யக்கூடும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.