கல்லறை தோட்ட ஊழியரை சுமந்து சென்று காப்பாற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
1 min read
The female police inspector who carried and rescued the cemetery plantation worker
11.11.2021
சென்னையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கல்லறைத் தோட்ட ஊழியரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தோளில் சுமந்து சென்று காப்பாற்றினார்.
கல்லறைத் தோட்ட தொழிலாளி
சென்னை டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). இவர் அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் வேலை செய்து வருகிறார் . நேற்று இரவு பெய்த மழையில் நனைந்ததால் இன்று காலை வலிப்பு நோய் ஏற்பட்டு கல்லறை மீது மயங்கி விழுந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து டி.பி.சத்திரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மயங்கி கிடந்த உதயகுமாரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி எவ்வித தயக்கம் இன்றி அலேக்காக தூக்கி தனது தோளில் சுமந்துக்கொண்டு வேகமாக வெளியே வந்தார்.
பின்னர் அவரை ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஒருவர் உயிருக்கு போராடும் நேரத்தில் மற்ற போலீஸ்காரர்களை உதவிக்கு அழைக்காமல் நேரடியாக களப்பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் செயலை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.
பாராட்டு
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, கொரோனா காலக்கட்டத்தில் ஓட்டேரி பகுதியில் சாலையோரம் வசித்து உயிரிழந்த மூதாட்டியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் இந்த செயலை நடிகர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:
சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை. முன்னுதாரண அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்.