சென்னையில் கரை கடந்தது, தாழ்வு மண்டலம்; மழைக்கு 14 பேர் சாவு
1 min read
Crossed the border in Chennai, low zone; 14 killed in rain
11.11.2021
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையை கடந்தது. தமிழகத்தில் மழைக்கு 14 பேர் இறந்துள்ளனர்.
கரையை கடந்தது
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று சென்னை அருகே இரண்டு மணி நேரத்தில் தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.
தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசியது.
மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நாளை வலுவை இழக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் அதி கனமழைக்கான எச்சரிக்கை வாபஸ் பெறப்படுகிறது என்றும்,
சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கான ரெட் அலர்ட் விலக்கப்படுகிறது என்றும் வானிலை மையம்அறிவித்துள்ளது. இருப்பினும், சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மிக கனமழை வரைபெய்யும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மழைக்கு 14 பேர் பலி
தமிழகத்தில் கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் பெய்த மழை காரணமாக தற்போது வரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 1,45,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. 187 கால்நடைகள் இறந்துள்ளன. 237 வீடுகள், 1,146 குடிசை வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.” என்றார்.
மேலும் அவர் கூறும்போது, “சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் வெள்ளம் சூழ்ந்த தாழ்வான பகுதிகளில் இருந்த 2 ஆயிரத்து 859 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் மற்றும் தமிழக அரசின் மாநில மீட்புக் குழுக்கள் என மொத்தம் 15 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.10 சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” என்றார்.