முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடல் 10-ந் தேதி மாலை அடக்கம்
1 min read
The body of Brigadier General Pipin Rawat will be laid to rest 10th evening
8/12/2021
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் வருகிற வெள்ளிக்கிழமையன்று (10-ந்தேதி) மாலை டெல்லி கொண்டு செல்லப்படும். பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.
ஹெலிகாப்டர் விபத்து
நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் பாதுகாப்புப் படை பயிற்சிக் கல்லூரி உள்ளது. அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள், விமானப் படையினர் என 14 பேர் எம்.ஐ., 17 வி5 ஹெலிகாப்டரில் பயணித்தனர். கோவை அருகே உள்ள சூலூர் விமானப் படை தளத்திலிருந்து பிற்பகலில் புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் குன்னூர், காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. அதில் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
பாதுகாப்புப் படை பயிற்சி கல்லூரியில் பணியாற்றும் குரூப் கேப்டன் வரூண் சிங் மட்டும் காயங்களுடன் பிழைத்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் ஸ்டாலின், ராணுவ அதிகாரிகள், வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அனைவரது உடல்களும் டில்லிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் வருகிற 10-ந் தேதி(வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.