காய்ச்சல், இருமல் இருந்தாலும் கொரோனா சந்தேகத்திற்குரியவர்; புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
1 min read
Corona suspicious despite fever and cough; Publication of new guidelines
1/1/2022
காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் கொரோனா சந்தேகத்திற்குரியவர் என்ற புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
கொரோனா
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்பட்டன. கடந்த 29-ந்தேதி 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. 30-ந் தேதி இந்த எண்ணிக்கை திடீரென 13,154 ஆக உயர்ந்தது. நேற்று 16,764 ஆக பதிவாகி இருந்தது. இன்று காலை 22,775 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
தனிமைப்படுத்துதல்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளை பரிசோதித்து அவர்களை விரைவாக தனிமைப்படுத்துவது வைரஸ் பரவலை தடுப்பதில் முக்கியமானது.
காய்ச்சலுடன் தலைவலி, தொண்டை வலி, மூச்சு திணறல், உடல்வலி, சுவை, வாசனை இழப்பு போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் நபர் அல்லது காய்ச்சலுடன் இந்த அறிகுறிகள் இல்லாமலேயே இருந்தாலும் சந்தேகிகப்படும் நபராக கருதி உடனே தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை முடிவுகள் வர 5 முதல் 8 மணி நேரம் ஆகும் என்பதால் நோய் தொற்றை உறுதிப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் ஆன்டிஜென் சோதனைகளை ‘ஆர்.ஒ.டி.) அதிகரிக்க வேண்டும். 24 மணி நேர அடிப்படையில் பல ஆர்.ஏ.டி. சோதனை மையங்களை அமைக்கவும், அனைத்து மாவட்ட மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆர்.ஏ.டி. சோதனையை அனுமதிக்க வேண்டும். தேவையான பரிசோதனை உபகரணங்களை வாங்குவதை விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.