May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

கடன் தொல்லையால் 2 மகள்களுடன் தாய் தீக்குளித்து தற்கொலை

1 min read

Mother commits suicide by setting herself on fire with 2 daughters due to debt harassment

2/1/2022

கடன் தொல்லை காரணமாக தாய் மற்றும் 2 மகள்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2 மகள்கள்

கேரள மாநிலம் ஆலப்புழை அருகே உள்ள கிழக்கே புரி பகுதியை சேர்ந்தவர் சசிதரன். இவருடைய மனைவி பிரசன்னா (வயது 54). இவர்களுக்கு சசிகலா (34), மீனு (31) என 2 மகள் இருந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சசிதரனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் கணவரின் சிகிச்சைக்கும்,குடும்பத்தை நடத்துவதற்கும் பிரசன்னா கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்தநிலையில் கடனை கொடுத்தவர்கள் அந்தப் பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் பிரசன்னாவால் கடனை திருப்பி அடைக்க முடியவில்லை.

தற்கொலை

மேலும் கணவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இதன்காரணமாக பிரசன்னா மிகுந்த மனவேதனை அடைந்தார். இந்தநிலையில் நேற்று காலை பிரசன்னா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து அவர் தன்னுடைய உடலில் பெட்ரோல் மற்றும் மண்எண்ணெயை ஊற்றியதோடு மகள்களான மீனு, சசிகலா மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதனால் அவர்கள் 3 பேரும் உடல் கருகிய நிலையில் அலறினார்கள். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து அவர்கள் 3 பேரையும் மீட்டனர். எனினும் அவர்கள் 3 பேரும் பரிதாபமாக இறந்துவிட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் ஆலப்புழை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மகள்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலப்புைழ அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடன் தொல்லை காரணமாக 3 பெண்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.