குழித்துறையில் 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை
1 min readTeen commits suicide by killing 2 children in graveyard
2.1.2022
குழித்துறை அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 குழந்தைகள்
குழித்துறை அருகே உள்ள கழுவன்திட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெபஷைன் (வயது 35). இவர், கேரள மாநிலம் திருவனந்தபுரம் வர்க்கலை பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜி (27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு பிரியா (2) என்ற மகளும், ஆறுமாத பெண் குழந்தையும் இருந்தது. ஜெபஷைன் விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து செல்வார். விஜி தனது மாமியார் ராஜம்மாளுடன் வசித்து வந்தார். ராஜம்மாள் தினமும் அருகிலுள்ள தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது வழக்கம்.
தற்கொலை
நேற்று மதியம் ராஜம்மாள் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தனது பேத்திகள் இரண்டு பேரும் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மருமகள் விஜி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த ராஜம்மாள் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டனர்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் விஜி தனது 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூன்று பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
விஜி இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து கேரளாவில் உள்ள அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்தார்.
விஜி இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்தது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்துகொண்ட விஜி நேற்று மாலை 3 மணியளவில் மாமியார் ராஜம்மாளை தேவாலயத்திற்கு செல்லுமாறு அனுப்பி வைத்து விட்டு தனது தாயாரிடம் போனில் பேசி உள்ளார்.
தேவாலயத்திற்கு சென்ற மாமியார் ராஜம்மாள் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வருவதற்குள் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். 2 மணி நேரத்திற்குள் குழந்தையை கொன்று விட்டு தானும் தனது உயிரை மாய்த்துள்ளார். எனவே விஜி ஏற்கனவே இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விஜியின் கணவர் ஜெபஷைன், மாமியார் ராஜம்மாள், விஜியின் தாயாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட விஜி மற்றும் அவரது குழந்தைகளின் உடல் பிரேத பரிசோதனை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.