அமெரிக்கா உடனான விண்வெளி உறவை துண்டிப்பு- ரஷியா பகிரங்க அறிவிப்பு
1 min read
Russia announces severance of space ties with US
3.3.2022
அமெரிக்கா உடனான விண்வெளி உறவை துண்டித்து கொள்வதாக ரஷியா பகிரங்கமாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல்
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 8-வது நாளாக இன்றும் நடைபெற்றது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்கா மீதான கடுமையான நிலைப்பாட்டை ரஷியா எடுக்க தொடங்கியிருக்கிறது. அதன் ஒரு நடவடிக்கையாக, சர்வதேச விண்வெளி நிலைய பணிகளில் அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்து கொள்வதாக ரஷியா அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கான ராக்கெட் என்ஜின் வழங்குவதையும் நிறுத்தி கொள்வதாக ரஷியா அறிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலைய பணிகளில் ஜப்பான், கனடா, அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பா இணைந்துள்ளன. அங்கு உலக விண்வெளி வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு இணைந்து பல்வேறு ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு ஆய்வுகளை இந்த விண்வெளி நிலையம் நடத்தி வரும் சூழலில் அந்த ஒத்துழைப்பை ரஷியா முழுமையாக துண்டித்து கொள்வதாக அறிவித்துள்ளது.இது ஒரு மிகப்பெரிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் ரஷியாவின் பங்களிப்பு ஆகும்.
பல கோடி டாலர்கள் மதிப்பிலான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வரும் சூழலில் ரஷியாவின் இந்த அறிவிப்பு உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணுஆயுத போர்
மேலும், அணு ஆயுத போர் என்பது தங்கள் கையில் இல்லை என்றும் அது முழுக்க முழுக்க நேட்டோ படைகள் மற்றும் மேற்கத்திய நாடுகள் கைகளில் தான் இருக்கிறது.எனவே அணு ஆயுத பயன்பாடு என்பது தங்கள் நிலைப்பாடு இல்லை என்று ரஷிய தரப்பு விளக்கியுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது உலக நாடுகள் பல தொடர்ந்து பொருளாதார தடை நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ரஷியாவும் உலக நாடுகளுக்கு பதிலடி தரும் விதமாக இந்த நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
==
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு
மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,மார்ச்.4-
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க சிறப்புக்குழு அமைத்துள்ளதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக மாணவர்கள்
உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதலை நடத்தி வருகிறது.இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு தமிழக மாணவர்களுக்கும் சிக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்களை மீட்க முயற்சிகள் மத்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் மீட்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய முதல்-அமைச்சர் இந்திய தூதர்களுடன் ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த சிறப்பு குழுவில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மீட்பு பணியில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வர் என்றும் தெரிவித்துள்ளார். உக்ரைனின் மேற்கு பகுதியில் அதிகமான மாணவர்கள் தங்கியிருப்பதால், அவர்களை ரஷிய எல்லை வழியாக அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுவரை உக்ரைனில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்த 193 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.