பணியிட மாற்றம் கோரி காஷ்மீரில் அரசு ஊழியர்கள் 2 -வது நாளாக போராட்டம்
1 min readGovernment workers protest for 2nd day in Kashmir demanding change of workplace
3.6.2022
காஷ்மீரில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் தங்களை சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜம்முவில் 2வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகள் தாக்குதல்
காஷ்மீரில் சமீபகாலமாக வெளிமாநிலத்தினரையும், பண்டிட் சமூகத்தினரையும் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் 12-ந்தேதி, ராகுல்பட் என்ற தாலுகா அலுவலக ஊழியரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அவர் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்.
குல்காம் மாவட்டத்தில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு, பண்டிட் சமூகத்தை சேர்ந்த ரஜினி பாலா என்ற ஆசிரியை சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, குல்காம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வங்கி மேலாளர் ஒருவரை பயங்கரவாதிகள் கொலை செய்தனர். இந்த ஆண்டு மட்டும் காஷ்மீரில் 16 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். கடந்த மே 1-ந்தேதியில் இருந்து குறிவைத்து நடந்த கொலைகள் மட்டும் 8 ஆகும். அவற்றில் முஸ்லிம் அல்லாத அரசு ஊழியர்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
போராட்டம்
இந்த கொலைக்கு பலத்த கண்டனம் எழுந்துள்ளது. இந்த நிலையில், காஷ்மீரில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் தங்களை சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜம்முவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர் ரஜ்னி பாலா சுட்டுக்கொல்லப்பட்டதும், காஷ்மீரில் இருந்து வெளியேறி ஜம்மு பிராந்தியம் சென்ற அரசு ஊழியர்கள் அங்கு 2-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சுரைந்தர் குமார் என்ற அரசு ஊழியர் கூறும் போது, ‘ நாங்கள் காஷ்மீருக்கு திரும்ப்போவது இல்லை. அங்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது. பயங்கரவாதிகள் குறிப்பிட்டு தாக்குதல்கள் நடத்துகின்றனர். எனவே அங்கு செல்வதற்கு இறந்துவிடலாம்” என ஆவேசமாக குறிப்பிட்டார்.