சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம்
1 min read
Minister Sekarbabu Sami darshan as he ascended the Kanakasabai at the Chidambaram Natarajar Temple
6.5.2022
பரபரப்பான சூழ்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அவர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் பொதுதீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சிதம்பரம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த கோவிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கோரி பக்தர்கள், சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
ஆனால், கொரோனா தொற்று காரணத்தை காட்டி கனகசபை மீது ஏறி நின்று பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. முடிவில் கனகசபை மீது பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள் அரசாணையை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தனர். என்றாலும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கணக்கு வழக்குகளை அறநிலையத்துறை ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வு நாளை முதல் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆய்வுக்கும், கோவில் பொதுதீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அவர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் பொதுதீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தினார். கோவிலில் உள்ள கோ-சாலையையும் பார்வையிட்டார்.
இது குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யவே வந்தேன். ஆய்வுக்கு வரவில்லை என்றார்.