யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத்க்கு நிபந்தனை ஜாமீன்
1 min read
Conditional bail for U-duper Karthik Gopinath
9.6.2022
இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலை புனரமைப்பதாக கூறி ரூ.44 லட்சம் ரூபாய் வசூல் செய்த வழக்கில் கைதான யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கார்த்திக் கோபிநாத்
சென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக் கோபிநாத் (வயது 33). இவர், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலை புனரமைப்பதாக கூறி ‘யூடியூப்’ மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ.44 லட்சத்துக்கு மேல் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதான கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் கோரி கடந்த வாரம் அவரது வக்கீல்கள் தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில் அவருக்கு ஜாமீன் கேட்டு 2-வது முறையாக மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த பூந்தமல்லி கோர்ட்டு, கார்த்திக் கோபிநாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டது. அதன்படி அவர், 2 வாரத்துக்கு ஆவடியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் தினமும் காலையில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.