கண்ணாயிரத்தை அழவைத்த சில்லறை/ நகைச் சுவை சிறுகதை
1 min readKannayiram cry for coin / Story by Thabasukumar
5.7.2022
கண்ணாயிரம் குற்றாலத்துக்கு பஸ்சில் சுற்றுலா சென்றபோது கடலூரில் பஸ்நின்றவேளையில் அவரும் அவரது மனைவியும் ஓட்டலில் காந்தாபிரியாணி ருசித்துசாப்பிட்டனர். இதைத்தொடர்ந்து பஸ் குலுங்கி குலுங்கி கடலூரைவிட்டு நெல்லிக்குப்பத்தை தாண்டிசென்றபோது கண்ணாயிரத்துக்கு காந்தாபிரியாணி வேலைசெய்ய ஆரம்பிக்க பண்ருட்டிவந்ததும் பஸ்சை நிறுத்தச்சொல்லுங்கள் என்று அவர் கெஞ்ச பண்ருட்டியில் பஸ் நின்றதும் கண்ணாயிரம் பாத்ரூமைதேடி ஓட அங்கே ஹவுஸ்புல்லாக இருந்ததால் வயிற்றை பிடித்துக்கொண்டு விழிக்க அடுத்து எந்த கதவுதிறக்கும் என்று காத்திருந்தார். என்ன பாத்ரூமில் இவ்வளவு கூட்டம்..எல்லோரும் காந்தாபிரியாணி சாப்பிட்டு இருப்பாங்களோ என்று கண்ணாயிரம் கேட்க…அங்கே காத்திருந்த முதியவர் ஒருவர்.. என்னப்பா..அர்ஜண்டா..இது இலவச கழிப்பறை..அதான் கூட்டம்..அந்தப்பக்கம் போனிங்கன்னா..கட்டண கழிப்பறை இருக்கு…அங்கே போனிங்கன்னா பிரியா இருக்கும் என்று சொல்ல…கண்ணாயிரத்துக்கு அங்கு போகலாமுன்னு தோன்றிய நேரத்தில் அவர் ஏதிரே இருந்த அறையின் கதவு திறக்க கண்ணாயிரம் அதன் உள்ளே பாய முயன்றபோது ஒருவர் அவரை தள்ளிவிட்டு வேகமாக உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
அட..டா..வாய்ப்பு போச்சே…ஒவ்வொரு கதவு முன்னாலேயும் மூணுபேரு நிக்காங்களே…இது கதைக்கு ஆகாது..அந்த பக்கத்தில் உள்ள கட்டண கழிப்பறைக்கு போகவேண்டியதுதான் என்று வயிற்றைபிடித்தபடி வெளியே வந்தார். வயிறு கடமுடா என்று சத்தம்போட..கண்ணாயிரம் கட்டண கழிப்பறையை நோக்கி ஓடினார்..
போன வேகத்தில் அவசரத்தில் எது ஆண்கள் கழிப்பறை என்று தெரியாமல் பெண்கள் கழிப்பறை பக்கம் ஓட படத்தை சரியா வரைஞ்சுபோடமாட்டேங்கிறாங்க. எல்லாம் ஒண்ணுபோலத்தான் இருக்கு..நம்ம அவசரம் யாருக்கு புரியுது என்றபடி வெளியேவந்தவர் ஆண்கள் கழிவறை பக்கம் ஓடினார்.
வாசலில் மேஜை போட்டு அமர்ந்திருந்தவர்..வோவ்…காசு கொடுத்துட்டு போய்யா..என்று பின்னால் விரட்டியபடிவந்தார். கண்ணாயிரம் அவரிடம்..அவசரம் அய்யா..வந்து தர்ரேன்..ஓட்டலில் சாப்பிட்டுவிட்டுதானே காசு கொடுக்கிறோம்..இங்கே மட்டும் என்ன போயிட்டுவந்து கொடுக்கிறேன்..என்று சொல்லிப்பார்த்தார். அவர் கேட்காமல்..யோவ்..இங்கே போகும்போது தான்யா கொடுக்கணும்..ஐந்து ரூபாய் எடு என்றார்.
கண்ணாயிரம்…என்ன ஐந்து ரூபாயா..காட்டுப்பக்கம் ஒதுங்கினா பிரியா போயிருக்கலாம்…கொஞ்சம் குறைச்சுக்குங்க..ரொம்ப அதிகமா இருக்கு..இலவச கழிப்பிடத்துக்கு போகாம உங்க இடத்துக்கு வந்திருக்கேன்…கொஞ்சம் பார்த்துசெய்யுங்க என்று கெஞ்ச கழிப்பறை குத்தகைக்காரருக்கு கோபம் வந்தது.
என்னய்யா..நாங்க கடனை குடனை வாங்கி குத்தகை எடுத்திருக்கிறோம்..நீ என்னடான்னா..இரண்டு ரூபாயை குறை மூணு ரூபாயை குறைன்னுட்டு ஆளை உயிரை வாங்குற..ஐந்து ரூபாய்க்கு ஒரு பைசா கூட குறைக்க முடியாது..பேசாம ஐந்து ரூபாயை கொடுத்துட்டுபோ என்று சொல்ல கண்ணாயிரம் ..எங்கிட்ட சில்லறை இல்லை என்க..குத்தகைகாரர் இருக்கிறதை கொடுய்யா என்று சத்தம் போட கண்ணாயிரம் ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினார்.
குத்தகைகாரர் அதைவாங்கிக்கொண்டு போய்யா…போயிட்டு ஐந்து நிமிடத்தில்வந்து சில்லறைவாங்கிக்கோ என்றார்.
கண்ணாயிரம் விழிக்க வயிறு படபட என்க..சில்லறையை நீங்க தந்திடணும்..மறந்திடாதீங்க என்றபடி வேக வேகமாக உள்ளே ஓடினார்.
உள்ளே கூட்டம் அதிகம் இல்லை.சுத்தமாக இருந்தது.கண்ணாயிரம் ஒரு கதவை தள்ளிக்கொண்டு உள்ளே ஓடி கதவை பூட்டியபடி..அப்பாட..ஒரு பாத்ரூமுக்கு இந்தபாடா..என்று பெருமூச்சுவிட்டபடி இருந்தார். இனி அந்த பிரியாணி பக்கமே எட்டிப்பார்க்கக் கூடாது..என்னபாடுபடுத்துது…கட்டணம் வேற அதிகமா இருக்கு..போற போற இடங்களிலே இப்டி போனா செலவு என்ன ஆவுறது..நம்மளவிட்டுட்டு வேற போயிருவானுவ…என்றவாறு இருந்து முடித்தார்.
ஆ..தண்ணியெல்லாம் செழிம்பாத்தான் இருக்கு…பரவாயில்ல..அதான் காசுவாங்கிறாங்கல்ல.. சரி… குடுக்கிற காசுக்க வஞ்சம் இல்லாம பயன்படுத்திக்கிடுவோம் என நினைத்த இரண்டு பக்கெட் தண்ணீரை பிடித்த தொடைக்கு கீழே ஊற்றிக் கொண்டார். பின்னர் வெளியே வந்தார். மறக்காம சில்லறை வாங்கணும்..என்று நினைத்தவருக்கு வயிறு மீண்டும் டமாரம் அடிக்க..அடடா..வந்தது ஆபத்து ..என்றபடி மீண்டும் உள்ளேபோய் கதவைசாத்திக்கொண்டார்.என்னடா..இது..இந்தபாடுபடுத்தது…குறைச்சு சாப்பிட்டிருக்கலாம்…ஆசையாரைவிட்டது..என்றவாறு பத்து நிமிடத்தை அங்கே போக்கிவிட்டு சோர்ந்துபோய் வெளியே நடந்து வந்தார்.
குத்தகைகாரரிடம் ஐந்து ரூபாய்போக நாப்பத்துஐந்து ரூபாய் வாங்கணுமே..என்றபடி குத்தகைகாரரை தேடினார்.அவரை காணவில்லை.
அந்த இடத்தில் ஒரு சிறுவன் இருந்தான்.
ஆ…அப்பம் என் சில்லறை என்றபடி..கண்களை கசக்கியவாறு…ஏன் தம்பி இங்கே ஒருபெரியவர் இருந்தாரே…அவரை எங்கே..என்று கேட்க அவனோ அதெல்லாம் எனக்கு தெரியாது..என்க கண்ணாயிரம் கோபத்தில்..என்ன உனக்கு தெரியாதா…அவர் எனக்கு நாப்பத்துஐந்து ரூபாய் சில்லறை தரணும் தம்பி..என்று சொல்ல சிறுவனோ..அவர் எங்கிட்ட அப்படி ஓண்ணும் சொல்லிட்டு போகலை என்று சொல்ல கண்ணாயிரம் முகத்தில் கோபம் கொப்பளித்தது. என்ன சின்னப்புள்ளத்தனமா…இருக்கு..ஐந்து நிமிசத்திலேவாங்க..சில்லறைதாரேன்னு சொல்லிட்டு எங்கே போயிட்டாரு..எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் என்று கத்தினார். உடனே அந்த சிறுவன்..கத்தாதீங்க..ஐந்து நிமிடத்தில் வரச்சொன்னாரில்லையா..நீங்க ஏன் பத்து நிமிடம் கழிச்சு வந்திங்க என்று மடக்க கண்ணாயிரம்..என்ன..போற இடத்திலே முன்னப்பின்ன ஆகத்தான் செய்யும்..அதுக்காக சில்லறை தரமாட்டிங்களா..நான் சாதரணமான ஆள் இல்லை தெரியுமா..சிலம்பமெல்லாம் கற்றுக்கிட்டு இருக்கேன் என்று சிறுவனிடம் எடுத்துவிட்டார். கழிப்பறைக்கு வந்தவர்கள் கண்ணாயிரத்தை பரிதாபமாக பார்த்துவிட்டு செல்ல..கண்ணாயிரம் அந்த சிறுவனிடம்..சில்லறையை கொடுத்திடு தம்பி…பஸ்போயிடும் தம்பி என்றுகூற சிறுவனோ…இந்த பஸ்போனா..அடுத்த பஸ்சிலே போங்க என்று சொல்ல கண்ணாயிரம்..ஏய் நான் வந்தது டவுண் பஸ்சில்ல..சுற்றுலா பஸ்சு..நீ சில்லறை தரலன்னா…நான் அழுதிடுவேன் என்க…சிறுவன் அதெல்லாம் முடியாது என்றான்.கண்ணாயிரம் ஓ..என்று அழ..அங்கு கூட்டம் கூடியது.
சில்லறை மாத்த சென்ற குத்தகைக்காரர்…என்ன ஆச்சோ என்று அங்கு ஓடிவந்தார். கண்ணாயிரம் அழுது கொண்டிருப்பதை பார்த்து..ஏய் அழுகையை..நிறுத்து..ஐந்து நிமிடத்திலே வெளியேவான்னு சொன்னேனே..வந்தியா..வரலை. ஐந்து நிமிடத்திலே வந்திருந்தின்னா கடைக்கு கூட்டிட்டுபோயி சில்லறை வாங்கி கொடுத்திருப்பேன்..இப்பே நான் சில்லறைவாங்கிட்டுவருகிறதுக்குள்..இப்படி கலாட்டா பண்ணிரிய என்று எகிர கண்ணாயிரமோ பதிலுக்கு சில்லறைவாங்க போனா சீக்கிரம் வரவேண்டியதுதானே என்று சொல்ல குத்தகைக்காரர்..ஏய் போற இடத்திலே முன்னப்பின்ன இருக்கும்..அதுக்கு இந்த கத்தலா என்றபடி சில்லறைநோட்டை கொடுத்தார்.
அதை வாங்கி கண்ணாயிரம் உஷாராக எண்ணினார்.அதில் ஒரு நோட்டு கிழிந்திருக்க…ஆ….இது செல்லாது…இது செல்லாது..என்று கத்த குத்தகைக்காரர்..பற்களை கடித்தபடிபார்த்தார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.