ஆவுடையானூர் – பாவூர்சத்திரம் சாலையை சொந்த செலவில் சீரமைத்த தொழிலதிபர்கள்
1 min read
Businessmen who renovated the Audaiyanoor – Bhavoorchatram road at their own expense
25.10.2022
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் சிதிலமடைந்து கிடக்கும் ஆவுடையானூர் -பாவூர்சத்திரம் சாலையை தொழிலதிபர்கள் தங்களது சொந்த செலவில் சீரமைத்தனர்.
தகுதியற்ற சாலை
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானூரிலிருந்து காமராஜர் தினசரி சந்தை வழியாக சென்று தென்காசி-திருநெல்வேலி சாலையில் இணையும் ஊராட்சி ஒன்றிய சாலையானது மிகுந்த போக்குவரத்தும், அதிக பயன்பாடும் கொண்ட சாலையாகும். இந்த சாலையை மாநில நெடுஞ்சாலை துறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த 3.3.2022 அன்று ஊரக உள்ளாட்சி துறையால் அரசாணை எண் 20 மூலம் மாநில நெடுஞ்சாலை துறைக்கு ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் இது சம்பந்தமாக நெடுஞ்சாலைத்துறை அரசாணை வெளியிடாததால் இந்த சாலை இப்போது ஊராட்சி ஒன்றிய சாலையாகவும் இல்லாமல், நெடுஞ்சாலைத்துறை சாலையாகவும் இல்லாமல் பணி செய்ய முடியாமல் சாலை பராமரிப்பின்றி போக்குவரத்திற்கு தகுதியற்ற சாலையாக உருமாறிவருகிறது.
சொந்த சாலை
அரசு இந்த சாலை பணியை துவங்க இன்னும் பல மாதங்கள் ஆகும் என்ற நிலை உள்ளதாலும் , வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதாலும் இங்கு காணப்படும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சாலையில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியாமல் வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது . மேலும் இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது.
எனவேஇது குறித்து ஆலோசித்த இந்த சாலையில் இயங்கிவரும் அரிசி ஆலை, செயற்கை மண் உற்பத்திசெய்யும் ஆலை ஆகியவற்றின் தொழில் அதிபர்கள் ஆர்.பி இராஜன்,ஏ.கே.என் ஜான்,கே.பி.என்.இராஜ், து.தமிழ்பாண்டி, கே.பி.என்.அன்பு, ஏ.எஸ்.பி. பாஸ்கர்,ஏ.கே.என் ஜார்ஜ், ஏ.எஸ்.பி.சந்திரன் ஆகியோர் முடிவெடுத்து அரசு சாலை பணிதொடங்க தாமதம் ஆகும் என்பதால் மக்கள் நலன் கருதி தங்களது சொந்த செலவில் சாலையை சீரமைக்க முடிவெடுத்து ஒன்றிய குழு உறுப்பினர் இராம.உதயசூரியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கு.செல்லப்பா ஆகியோர் மேற்பார்வையில் பணியினை மேற்கொண்டனர். இது வாகன ஓட்டிகள் மத்தியில் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.