அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்பு
1 min readMallikarjuna Kharge takes charge as the new president of the All India Congress Party
26.10.2022
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்றுக் கொண்டார்.
காங். தலைவர்
நீண்ட பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு, நேரு குடும்பத்தை சார்ந்தவர்களே அதிகமாக தலைவர் பதவியை அலங்கரித்து வந்தனர். அந்த வரிசையில் ராகுல்காந்தி தலைவர் பதவி வகித்து வந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார்.
இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, முழுநேர தலைவரை தேர்வு செய்தால் கட்சி பலப்படும் என்ற கருத்தும் வலுப்பெற்றதால், கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர்.
இந்தநிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 19-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
பதவி ஏற்பு
இதனை தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே அக்டோபர் 26-ந் தேதி பதவி ஏற்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனால் காங்கிரஸ் தலைமையகம் விழாக்கோலம் பூண்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, தேர்தல் சான்றிதழை கார்கேவிடம் முறைப்படி ஒப்படைத்தார். பின்னர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பொறுப்புகளை கார்கேவிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் அமர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.