40 ஆண்டுகளாக தேர்தல் பிரசாரத்திற்கு தடை, ஆனால் 100 சதவீதம் வாக்குப்பதிவு- அதிசய கிராமம்
1 min read
Ban on Election Campaigning for 40 Years, But 100 Percent Voting – Miracle Village
23,11,2022
குஜராத் சட்டசபை தேர்தல் பரபரப்புக்கு இடையே 40 ஆண்டுகளாக கிராமம் ஒன்றில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு தடை விதிக்க்கப்பட்டு வருகிறது.
தேர்தல் பிரசாரம்
குஜராத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் ராஜ் சமதியாலா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் எந்தவொரு அரசியல் கட்சியினரும் நுழைந்து விட முடியாது. அவர்கள் பிரசாரம் செய்வதற்கும் அனுமதி இல்லை.
ஏனெனில், பிரசாரத்திற்கு வேட்பாளர்களை உள்ளே விட்டால், அந்த பகுதிக்கு அவர்கள் ஏதேனும் தீங்கு விளைவித்து விடுவார்கள் என கிராமத்தினர் நினைக்கின்றனர். இந்த கிராமத்தில் மொத்தம் 1,700 பேர் உள்ளனர். அவர்களில், 995 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
100 சதவீத வாக்கு
ராஜ்கோட்டில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் உள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதித்து உள்ளது மட்டுமின்றி, யாரேனும் வாக்களிக்க வரவில்லை என்றால், அவர்களுக்கு ரூ.51 அபராதமும் விதிக்கப்படும்.
தேர்தல் நேரத்தில் அதிக அளவில் வாக்கு பதிவு இருக்க வேண்டும் என்பதற்காக கிராம வளர்ச்சி குழுவால் இந்த விதிமுறை உருவாக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று பல விதிகளை அவர்கள் உருவாக்கி வைத்து உள்ளனர்.
இதனால், இந்த கிராமத்தில் ஏறக்குறைய 100 சதவீதம் வாக்கு பதிவு நடந்து விடுகிறது. கிராம தலைவர் கூட ஒருமித்த ஒப்புதலின் பேரிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒருவேளை வாக்களிக்க முடியவில்லை எனில், குழுவிடம் அதற்கான காரணம் பற்றி தெரிவிக்க வேண்டும்.