பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- தலைமையாசிரியர் கைது
1 min readSexual harassment of schoolgirls- Principal arrested
2.1.2023
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் தலைமறைவான தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
பரமக்குடி அருகேயுள்ள சிறுவயல் கிராமத்தில் அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவிகள் சிலருக்கு தலைமையாசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவருக்கு உடந்தையாக ஆங்கில ஆசிரியர் மாணவிகளை மிரட்டி வருவதால் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிறுவயல் கிராம மக்கள் கடந்த 26 ம்தேதி மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸிடம் மனு அளித்து வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து குழந்தைகள் நல மையத்தினர் காவல் துறையினர் இணைந்து விசாரணை செய்தனர். விசாரனையில் பாலியல் தொல்லை உறுதி செய்யப் பட்டதை தொடர்ந்து மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் நயினார்கோவில் காவல் துறையினர் பள்ளி தலைமையாசிரியர் ஜுலியஸ் ரவிச்சந்திரன்(வயது 56), உடந்தையாக இருந்த ஆங்கில ஆசிரியர் ஜெயபால் என்ற செந்தில்வேல்(36) ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் தனிப்படை காவலர்கள் தலைமறைவான இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
கைது
இந்நிலையில் தலைமறைவான தலைமையாசிரியர் திருநெல்வேலியில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை காவலர்கள் திருநெல்வேலி விரைந்து சென்றனர்.
திருநெல்வேலி பெரியகுளம் அன்பு நகரில் அவரது வீட்டில் இருந்த தலைமையாசிரியர் ரவிச்சத்திரனை கைது செய்து நயினார்கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.இது குறித்து கல்வி துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.