May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு – காஷ்மீர் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

1 min read

Lack of security at Rahul Gandhi’s walk – blame on Kashmir administration

28.1.2023
காஷ்மீரில் ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு வந்த போலீசார் மாயமானதால், ராகுல்காந்தி நடுவழியில் யாத்திரையை நிறுத்திவிட்டு காரில் ஏறிச் சென்றார். இதுதொடர்பாக காஷ்மீர் நிர்வாகம் மீது அவர் குற்றம் சாட்டினார்.

ராகுல் பாதயாத்திரை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரை, தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் குடியரசு தினத்தையொட்டி, விடுமுறை விடப்பட்டிருந்தது. நேற்று காலை பனிஹல் என்ற இடத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. ராகுல்காந்தியுடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் தேசிய கொடி ஏந்தி பங்கேற்றனர். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லாவும், யாத்திரையில் கலந்து கொண்டார்.
ராகுல்காந்தியை போலவே அவரும் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து நடந்தார். உமர் அப்துல்லா நிருபர்களிடம் கூறுகையில், ”நாட்டின் நற்பெயர் மீது உள்ள கவலையால் பாதயாத்திரையில் பங்கேற்கிறேன்” என்றார்.

பாதுகாப்பு

தொடர்ந்து நடந்த பாதயாத்திரை காஷ்மீர் பள்ளத்தாக்கின் நுழைவாயிலான காசிகுண்ட் என்ற இடத்ைத அடைந்தது. அப்போது, ராகுல்காந்திக்கான வெளிப்புற பாதுகாப்பு அடுக்கில் இடம்பெற்றிருந்த காஷ்மீர் போலீசாரை காணவில்லை. இதனால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாதநிலை ஏற்பட்டது. பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து நடக்க முயன்ற ராகுல்காந்தியை அவரது பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டார். இரவு தங்க திட்டமிட்டு இருந்த அனந்தநாக் மாவட்டம் கானாபாலுக்கு போய்ச் சேர்ந்தார். பாதயாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
ராகுல்காந்தி நேற்று காலையில் 11 கி.மீ. தூரம் நடக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், குறைந்த தூரம். நடந்தவுடனேயே பாதுகாப்பு குளறுபடியால் பாதயாத்திரை நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

குற்றச்சாட்டு

பாதயாத்திரையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் துரதிருஷ்டவசமாக முற்றிலும் சீர்குலைந்தன. கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய போலீசாரை எங்குமே பார்க்க முடியவில்லை. எனது பாதுகாப்பு குழுவின் முடிவுக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது. எனவே, பாதயாத்திரையை ரத்து செய்தேன். பாதுகாப்பு வழங்க வேண்டியது காஷ்மீர் நிர்வாகத்தின் பொறுப்பு. மீதி உள்ள நாட்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:-

உத்தரவிட்டது யார்?

பாதயாத்திரைக்கு போலீஸ் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டது. இதனால் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. இதற்கு உத்தரவிட்டது யார்? இந்த குறைபாட்டுக்கு காரணமான அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும். ராகுல்காந்தியின் பாதுகாப்புடன் அதிகாரிகள் விளையாடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் பாதயாத்திரை, 30-ந் தேதி நிறைவடைகிறது.
மீதியுள்ள நாட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சுமுகமாக மேற்கொள்ளக்கோரி காஷ்மீர் நிர்வாகத்துடன் ராகுல்காந்தி பாதுகாப்பு குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கிடையே, ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு காஷ்மீர் போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆலோசிக்க வில்லை

இதுகுறித்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ள கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

யாத்திரை அமைப்பாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களும், சோதனை செய்யப்பட்டவர்களும் மட்டுமே பாதயாத்திரை பாதையை நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டனர். பனிஹலில் இருந்து ஏராளமானோர் பாதயாத்திரையில் இணைய இருப்பதாக யாத்திரை ஏற்பாட்டாளர்கள் எங்களிடம் சொல்லவில்லை. அதனால், காசிகுண்ட் பகுதியில் பெரும் கூட்டம் திரண்டது. முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பாதுகாப்பு குளறுபடி எதுவும் இல்லை. ஆனால், யாத்திரையை ரத்து செய்வதற்கு முன்பு எங்களுடன் ஆலோசனை நடத்தப்படவில்லை. இனிமேலும் யாத்திரைக்கு முழு பாதுகாப்பு அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.