June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

மேகாலயாவில் ஆளுங்கட்சியான என்.பி.பி கட்சிக்கு பாஜக ஆதரவு

1 min read

BJP supports NPP, the ruling party in Meghalaya

3.3.2023
மேகாலயா மாநில சட்டசபை தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. அங்கு பா.ஜ.க.வுடன் என்.பி.பி. கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

மேகாலயா

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்-மந்திரி கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 27-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்திபோடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்தத் தேர்தலை என்.பி.பி. கட்சியும், பா.ஜ.க.வும் தனித்தனியே சந்தித்தன. பதிவான வாக்குகள், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு 59 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடந்ததால் தனிப்பெரும்பான்மை பெற 30 இடங்கள் தேவை.ஆனால், இங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தது போலவே எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.
தற்போதைய ஆளும் கட்சியான என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். முதல்-மந்திரி கான்ராட் சங்மா, தெற்கு துரா தொகுதியில் தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ.க. வேட்பாளர் பெர்னார்டு மராக்கை வீழ்த்தி வெற்றி பெற்றார். கான்ராட் சங்மாவின் அண்ணன் ஜேம்ஸ் பன்சாங் சங்மா, 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த நிலையில், இந்த முறை தாடன்கிரே தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ரூபா மராக்கிடம் 18 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவிடம் என்பிபி கட்சி ஆதரவு கோரியது. ஆதரவு தருவதாக என்பிபி கட்சியின் தலைவருக்கு மேகாலயா பாஜக தலைவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் கான்ராட் சங்மா (வயது 45) தலைமையில் மீண்டும் என்.பி.பி., பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைகிறது. இவர் முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகன் ஆவார். முதல்-மந்திரி கான்ராட் சங்மா, மீண்டும் ஆட்சி அமைக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் ஆசியை நாடி உள்ளார்.
இதுதொடர்பாக அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “மேகாலயாவில் என்.பி.பி. கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்குமாறு மாநில பா.ஜ.க.வுக்கு பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா அறிவுரை வழங்கி உள்ளார்” என தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *