ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது
1 min read
Assistant Executive Engineer of Power Board arrested for accepting bribe of Rs.15 thousand
20.4.2023
ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
லஞ்சம்
திருச்சி மேலச் சிந்தாமணியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). கட்டிட காண்ட்ராக்டர் ஆன இவர், தனது நண்பர் பாலு என்பவருக்கு திருச்சி கம்பரசம்பேட்டை ஜெயராம் நகரில் வீடு கட்டி கொடுத்துள்ளார். பின்னர் அந்த வீட்டுக்கான மின் இணைப்பும் பெற்றுக் கொடுத்துள்ளார். பிறகு பாலு, அந்த குடியிருப்பினை வணிக தலமாக மாற்ற முடிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து குடியிருப்புக்கான மின் இணைப்பினை வணிக பயன்பாட்டுக்கு மாற்றி தரும்படி வெங்கடேசனிடம் கேட்டுக் கொண்டுள்ளார். உடனே வெங்கடேசன் கடந்த ஜனவரி மாதத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை, திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள சிந்தாமணி பிரிவில் கொடுத்துள்ளார். விண்ணப்பம் அளித்து மூன்று மாதங்களாக எந்த நடவடிக்கையும் இல்லாததால், காண்ட்ராக்டர் வெங்கடேசன் சம்மந்தப்பட்ட சிந்தாமணி பிரிவுக்கான உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் என்பவரை கடந்த கடந்த 17-ந் தேதி அன்று காலை சந்தித்து விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு அவர் ரூ.20,000 லஞ்சமாக கொடுத்தால் மின் இணைப்பின் டேரிப் மாற்றம் செய்து தருவதாக கூறியுள்ளார். பின்னர் இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியாக உதவி பொறியாளர் ராஜேஷ் பதினையாயிரம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு மாற்றம் செய்து தர இயலும் என்று கட்டாயமாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன், திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையின் காவல்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார்.
கைது
வெங்கடேசனின் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் ஆலோசனையின் பேரில் இன்று காலை 11 மணியளவில் வெங்கடேசனிடம் இருந்து உதவி பொறியாளர் ராஜேஷ் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து ராஜேஷை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மின் இணைப்பு டேரிஃப் மாற்றம் செய்வதற்கு அரசு கட்டணம் ரூ. 400 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.