சங்கரன்கோவில் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு- வீணாகும் தண்ணீர்
1 min read
Breakage in Thamirabarani joint drinking water project pipe near Sankarankoil – wasted water
28.7.2023
சங்கரன்கோவில் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
தாமிரபரணி தண்ணீர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முதல் நெல்லை செல்லும் சாலையில் தேவர்குளம் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து 6 அடி உயரத்திற்கு ஊற்று போல் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நெல்லையிலிருந்து சங்கரன்கோவில் வழியாக விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, புளியங்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய குடிநீர் குழாயில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வெளியேறியும் அதை சரி செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் சூழ்நிலையில் தொடர்ந்து சங்கரன்கோவில் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
எனவே மாவட்ட கலெக்டர் அலட்சியத்துடன் செயல்பட்டு வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.