சொந்த கார்களை “வாடகை டாக்சி” ஆக்க தமிழக அரசு அனுமதி
1 min read
Tamil Nadu government allows its own cars to become “hire taxis”.
18.11.2023
தமிழகத்தில் இனி சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தும் சொகுசு கார்கள் உள்பட வெள்ளை நம்பர் பிளேட் கொண்ட அனைத்து கார்களையும் டாக்சிகளாக மாற்றலாம். இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. இதுவரை, சில மாடல் கார்களை மட்டுமே டாக்சிகளாக இயக்கும் நடைமுறை இருந்தது.
தங்கள் சொந்தகார்களை டாக்சிகளாக மாற்ற விரும்பும் கார் உரிமையாளர்கள், அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் டாக்சிக்கான அனுமதியை பெறலாம். இருக்கைகளின் எண்ணிக்கையை பொறுத்து ரூ.625 முதல் ரூ.1,150 வரை கட்டணம் மற்றும் ஆவணங்களை செலுத்தி இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இந்த அனுமதி 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
ஆர்டிஓ ஒப்புதல் அளித்தவுடன், கார் உரிமையாளர்கள் தங்கள் காரின் நம்பர் பிளேட் நிறத்தை மஞ்சள் நிறமாக மாற்றி தங்கள் சொந்தகாராகவோ அல்லது டாக்சியாகவோ பயன்படுத்தலாம். இந்த வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆண்டுதோறும் சோதனைக்கு உட்படுத்தப்படும். கார் உரிமையாளர்கள் பயண கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம்.
புதிய கார்களை வாங்குபவர்கள் டாக்சி அனுமதிக்கும் பதிவு செய்து கொள்ளலாம். டாக்சி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 34 லட்சம் கார்கள் உள்ளன, சென்னையில் மட்டும் 9 லட்சம் கார்கள் உள்ளன. ஆனால் சென்னையில் 17 ஆயிரம் டாக்சிகள் மட்டுமே உள்ளன. தற்போது சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்படும் டாக்சிகளில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயன் அளிக்கும். டாக்சி கட்டணத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்’ என்றனர்.