May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழக கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

1 min read

Supreme Court order to Tamil Nadu Governor

1.12.2023
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார்.
தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அந்த 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு வழங்கியது.
இந்தநிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அதற்கு முன்னதாக 10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக ஆளுநர் தரப்பில் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விசாரணையின்போது ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார் என மத்திய அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி தெரிவித்தார்.

அதற்கு தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது. பஞ்சாப் மாநில ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது என வாதங்கள் முன்னெடுத்து வைக்கப்பட்டது. மேலும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத பட்சத்திலும், பண மசோதாவாக இல்லாத பட்சத்திலும் அவற்றை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். இல்லையென்றால் அரசமைப்பு சாசன சட்டம் கேலி கூத்தாகிவிடும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி “10 மசோதாக்களையும் முதலில் அனுப்பிய போதே கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கலாமே?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் “இந்த பிரச்சினையில் கவர்னர் ரவி தரப்பில் குழப்பம் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மறு நிறைவேற்றம் செய்து அனுப்பிய பிறகு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது ஏன்? மறு நிறைவேற்றம் செய்து அனுப்பி வைத்த மசோதாவை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்ப முடியுமா?
நீதிபதிகள் அரசமைப்பு சாசனம் 200-வது பிரிவின்படி ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையெனில் திருப்பி அனுப்ப வேண்டும். அல்லது குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். இந்த மூன்று வாய்ப்புதான் ஆளுநருக்கு உள்ளது. மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை முடக்கி வைக்க முடியாது.
தமிழக முதல்வரை ஆளுநர் அழைத்து இதுகுறித்து பேசி தீர்வு காணலாம். பல விஷயங்கள் குறித்து ஆளுநர், முதல்வர் இடையே பேசி தீர்வு காண முடியும். இதை ஆளுநர் செய்தால் பாராட்டுக்குரியதாக இருக்கும். இல்லாவிட்டால் நாங்களே உத்தரவிட நேரிடும்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.

அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.