காசி தமிழ் சங்கமம்-ரெயில் பயணத்தை கவர்னர் ஆர்.என் ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
1 min read
Governor RN Ravi flagged off the Khasi Tamil Sangam-Rail journey
16.12.2023
காசி தமிழ் சங்கமத்தின் ரெயில் பயணத்தை கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காசி தமிழ்சங்கமம்
கலாசார மையங்களாக திகழ்ந்த வாரணாசிக்கும், தமிழத்திற்கும் இடையேயான பிணைப்பை புதுப்பிக்கும் வகையில், காசி தமிழ் சங்கமத்தின் 2ம் கட்ட பயணம், நாளை துவங்கி வரும், 30ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை சென்னை ஐ.ஐ.டி., ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இருந்து பிரத்யேகமாக ஏழு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து வாரணாசிக்கு செல்லும் முதல் சிறப்பு ரயில் சேவையை, கவர்னர் ரவி நேற்று கொடியசைத்து துவங்கி வைத்தார்.
அதில், 216 பேர் பயணம் செய்தனர். இந்த ரயிலின் மூன்று பெட்டிகள், கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இரண்டாம் கட்ட பயணத்தில், 1512 பேர் பயணம் செய்ய உள்ளனர்.
இந்த நிகழ்வில், சென்னை ஐ.ஐ.டி,., இயக்குனர் காமகோடி, பா.ஜ., மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அடுத்தடுத்த வாரங்களில், சென்னையில் இருந்து மேலும் இரண்டு சிறப்பு ரயில்கள் வாரணாசி செல்ல உள்ளன. நாளை காசியில் நடைபெறும், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இதுகுறித்து, பாரதீய ஜனதா மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியதாவது:
கடந்த ஆண்டு துவங்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது, இரண்டாவது கட்டமாக நடக்கும் இந்த நிகழ்வில், பல்வேறு தரப்பட்ட மக்கள் பங்கேற்கின்றனர்.
தேசிய அளவில் நாம் அனைவரும் ஒன்று என்பதை பிரதிபலிக்கும் நிகழ்ச்சியாகவே, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அமைய உள்ளது. சபரிமலை பக்தர்களுக்கு போதிய ஏற்பாடுகளை கேரளா அரசு செய்யாதது கண்டனத்துக்குரியது.
அங்கு செல்லும் பக்தர்களுக்கான வசதியை மேம்படுத்துவது குறித்து, அம்மாநில அரசானது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்