ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் தமிழகத்திற்கு வராததற்கு காரணம் என்ன?-அண்ணாமலை கேள்வி
1 min readWhat is the reason for Sriharikota launch pad not coming to Tamil Nadu?- Annamalai asked
28.2.2024
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் முதலில் தமிழகத்திற்கு வருவதாக இருந்தது. அது வராமல் போனதற்கு தி.மு.க.தான் காரணம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று (பிப்.,28) தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார். அப்போது, ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தமிழக அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தூத்துக்குடி எம்.பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். அதேநேரம் தூத்துக்குடியின் பொறுப்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை.
இதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்ட வந்திருக்கும் பிரதமர் மோடியை வரவேற்று அவர் அளித்த விளம்பரத்தில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினின் பின்னணியில் சீன நாட்டின் கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட் படம் இடம்பெற்றுள்ளது. இஸ்ரோ தயாரிக்கும் ராக்கெட்களே நம் தேசம் ஏவும் நிலையில், சீன ராக்கெட்களின் புகைப்படத்தை வைத்து விளம்பரம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பிரதமர் மோடி, திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், இதனை குறிப்பிட்டு திமுக.,வின் தேசப்பற்று இதுதான் என கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த விளம்பரம், சீனா மீதான திமுக.,வின் அர்ப்பணிப்பையும், நமது நாட்டின் இறையாண்மையை அவர்கள் முற்றிலும் புறக்கணிப்பதையும் வெளிப்படுத்துகிறது.
ஊழலில் கொடிகட்டிப் பறக்கும் கட்சியான திமுக, குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ஸ்டிக்கர்களை ஒட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. விரக்தியின் வெளிப்பாடு அவர்களின் கடந்தகால தவறுகளை புதைக்கும் முயற்சியை மட்டுமே நிரூபிக்கிறது. ஆனால் சதீஷ் தவான் விண்வெளி மையம் இன்று ஆந்திராவில் மட்டும் உள்ளது, ஏன் தமிழகத்தில் இல்லை என்பதை திமுக.,வுக்கு நாம் நினைவூட்ட வேண்டும்.
இஸ்ரோவின் முதல் ஏவுதளம் கருத்தாக்கம் செய்யப்பட்டபோது, இஸ்ரோவின் முதல் தேர்வாக இருந்தது தமிழகம்தான். இதற்கான கூட்டத்தில் அப்போதைய தமிழக முதல்வர் அண்ணாதுரை கடுமையான தோள்பட்டை வலி காரணமாக பங்கேற்க முடியாத நிலையில், தனது அமைச்சர்களில் ஒருவரான மதியழகனை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார். அவருக்காக இஸ்ரோ அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்து, இறுதியில் மதியழகன் கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
அதுவும் மோசமான ரீதியில் கலந்துகொண்டார். இதுதான் 60 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் விண்வெளித் திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பு. திமுக பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.