சாலை விபத்தில் 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
1 min read4 college students killed in road accident
12.3.2024
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டில் இருந்து அச்சரப்பாக்கம் வழியாக மதுராந்தகம் நோக்கி பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மேல்மருவத்தூர் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது பேருந்து பக்கவாட்டில் உரசியதில், படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் தவறி விழுந்தனர்.
இந்த கோர விபத்தில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒரு கல்லூரி மாணவர் ரஞ்சித் பலத்த காயத்துடன் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த மூவரும் மதுராந்தகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வந்த கமலேஷ், தனுஷ், மோனிஷ் ஆகிய மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்ட ரஞ்சித் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சிறுநாகலூர் கிராமம். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று 12.3.2024 தொழுப்பேடுவிலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது.
அந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மதுராந்தகம் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள் தனுஷ் (வயது 21) த.பெ. முனியப்பன். கமலேஷ் (வயது 19) த.பெ. முருகேசன் மற்றும் மோனிஷ் (வயது 19) த.பெ. சிவகுமார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிழிந்தனர் மேலும் இவ்விபத்தில் திரு ரவிச்சந்திரன் (வயது 20) த.பெ. குணசேகரன் என்பவர் மதுராந்தகம் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும். வேதனையுமடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்தப் பேரிழப்பு நம் அனைவருக்கும் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா இரண்டு இலட்சம்ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.