நாடு முழுவதும் 96. 8 கோடி வாக்காளர்கள்
1 min read
96.8 crore voters across the country
16.3.2024
நாடு முழுவதும் 18வது பாராளுமன்றத் தேர்தலில் 96.8 கோடி பேர் ஓட்டளிக்க தகுதியானவர்கள் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் இன்று (மார்ச்-16) அளித்த பேட்டியில் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:
நடப்பு, பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் இறுதியில் முடிவடைகிறது. இதற்குள் புதிய பாராளுமன்றத் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. இதற்கென ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும். தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. தேர்தல் அனைத்தும் சவால் நிறைந்தது தான். நியாயமான , நேர்மையான, வெளிப்படையான தேர்தல் நடத்தப்படும் . 800 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசித்தேன். 55 லட்சம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன.
நாடு முழுவதும் 96. 8 கோடி பேர் ஓட்டளிக்க தகுதியானவர்கள். இதில் 49.7 கோடி பேர் ஆண்கள் , பெண்கள் 47. 7 கோடிபேர் , மாற்றுத்திறனாளிகள் 88. 4 லட்சம் பேர் , 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 82 லட்சம் பேர் அடங்குவர். வயது மூப்பாளர்கள் வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
முதன்முதலாக 1. 82 கோடி பேர் ஓட்டளிக்க உள்ளனர். ஏப்ரல் 1ம் தேதி 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஓட்டளிக்க தகுதியானவர்கள்.
மக்கள் ஓட்டளிக்க 10.7 லட்சம் ஓட்டு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வன்முறை இல்லாத அமைதியான தேர்தல் நடத்த கமிஷன் உறுதி பூண்டுள்ளது. போலி செய்திகள் பரவாமல் கண்காணிக்கப்படும். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் குடி நீர் அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படும்.
மாநில எல்லைகளில் கண்காணிக்கப்படும். சர்வதேச எல்லைகளிலும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணி நடக்கும். பணம் தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்.
பணப்பரிவர்த்தனை தொடர்பாக வருமானவரித்துறை, அமலாக்கத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கண்காணிக்கப்படும். மாலை 6 மணிக்கு பிறகு வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத்தடை விதிக்கப்படுகிறது. ஓட்டுக்கு பணம் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஹெலிகாப்டர்கள், தனி விமானங்களில் தீவிர சோதனை நடத்தப்படும். சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை கடுமையாக இருக்கும்.
சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யலாம். போலி செய்தி பரப்பக்கூடாது.
போலியான தகவல்கள் செய்திகள் சமூகவலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் வெறுப்பு பிரசாரம் இருக்கக்கூடாது. தனி நபர் வாழ்க்கை குறித்து எந்த விமர்சனமும் இருக்கக்கூடாது.
கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பரப்புரையில் ஈடுபட வேண்டும்.
மத ரீதியில் தனிப்பட்ட முறையில் விமர்சனம் கூடாது. விளம்பரங்களை நம்பத் தகுந்த செய்தியாக மாற்றக்கூடாது. பிரசாரத்தில் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்தக்கூடாது. இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. வேட்பாளர் விவரங்களை செயலியில் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் நிருபர்களிடம் கூறினார்.