பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க கவர்னர் மறுப்பு
1 min read
Governor refuses to administer ministerial oath again to Ponmudi
17.3.2024
தமிழக முதல்வர் ஸ்டாலின், பொன்முடியை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி ஆளுநர் ஆர்.என்.ரவிக்குக் கடிதம் எழுதியிருந்த நிலையில் அதை அவர் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தகால திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் பொன்முடியின் மீதான தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதையடுத்து பொன்முடி மீண்டும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைத்திருக்கிறார் என்பது உறுதியாகிறது.
இதையடுத்து பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவியேற்க வைக்கும் நோக்கில் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், பொன்முடியை அமைச்சராக்க முடியாது எனத் ஆளுநர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி பெற்ற சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, அவர் நிரபராதி என நீதிமன்றம் உத்தரவிடவில்லை. குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கிறதே தவிர அவர் விடுவிக்கப்படவில்லை. ஆகவே, அவரை அமைச்சராக்குவது சரியாக இருக்காது” என கூறப்பட்டுள்ளது.