பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் நிலைமைதான் தமிழகத்திற்கும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min read
If the BJP comes to power, the situation in Kashmir will be the same for Tamil Nadu – Chief Minister M.K.Stalin
23.3.2024
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நாகை, தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண் வருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கருணாநிதி பிறந்த, வளர்ந்த, வென்ற பகுதிகளை உள்ளடக்கிய தொகுதிக்கு வந்துள்ளேன். இந்தியாவின் புதிய அத்தியாயத்தை எழுதக்கூடிய தேர்தல் பிரசாரத்திற்காக வந்துள்ளேன்.
பிரசார கூட்டத்தை மாநாடு போல் ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாராட்டுகள்.
முரரொலியை படித்து வளர்ந்த நான், வேட்பாளர் முரசொலிக்காக வாக்கு கேட்கிறேன். இந்திய கம்யூ.வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் இருக்காது. மாநிலங்கள் இருக்காது.
கண்ணுக்கு எதிரிலேயே ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை பார்த்தோம். காஷ்மீரில் எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் வைத்துள்ளனர்.
இந்தியாவில் எல்லா கட்டமைப்புகளையும் பாஜக சிதைத்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் நிலைமை தமிழகத்திற்கு வரலாம்.
பாஜகவிற்கு மாறுபவர்கள் மீது சட்டம் தனது கடமையை செய்யாதது ஏன் ? பாஜக அழுகுனி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. மோடியின் ஆட்சி தொடர்வது தமிழகத்திற்கு அழிவு, இந்தியாவிற்கு நல்லது அல்ல
தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்காத திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் வெளிச்சம் பாய்ச்சும் அளவிற்கு விடியலை திமுக அரசு வழங்கி வருகிறது.
திமுக ஆதரிக்கும் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். வங்கிகளில் குறைந்தபட்ச தொகை திட்டம் இருக்காது.
திமுக ஆதரிக்கும் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து செய்யப்படும். விற்பனை சந்தைகள் அமைக்கப்படும். திருவாரூரில் இருந்து புதிய ரெயில்கள்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை எடப்பாடி பழனிசாமியின் பம்மாத்து அறிக்கை. திமுக அறிக்கையை காப்பி அடித்து தேர்தல் அறிக்கையை ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் ஆளுநர் ஆய்வுக்கு புறப்பட்டபோது திமுக போராட்டம் நடத்தியது. இப்போது, ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தியுள்ளோம்.
ஆளுநர் விவகாரத்தில் இப்போது அதிமுக என்ன செய்கிறது? அதிமுக ஆதரித்ததால் தான் சிஏஏ சட்டம் அமலுக்கு வந்தது. மதுரை எய்ம்ஸ் விஷயத்தில் இழுத்தடிப்பது குறித்து மோடியிடம் அதிமுக கேள்வி கேட்டதா ?
கருப்புபணம் உள்ளிட்ட மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றினாரா ? 15 லட்சம் கூட வேண்டாம், 15 ரூபாயாவது மோடி கொடுத்தாரா ?
வேலை வாய்ப்பு அளிக்காமல் படித்த இளைஞர்கள் பக்கோடா விற்கலாம் என கூறினார்கள்.
விவசாயிகளை பாதிக்கும் 3 சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்தபோது அதிமுக என்ன செய்தது. பச்சை துண்டு போட்டபடி விவசாயிகளை ஈபிஎஸ் ஏமாற்றினார்.
விவசாயிகளுக்கு எதுவும் செய்யாததால் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடக்கிறது. அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை விட விவசாயிகள் தான் மோடிக்கு எதிரியாக தெரிகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.