செவ்வாய்பேட்டையில் விசாரணை கைதி மரணம்
1 min readDeath of an undertrial prisoner in Sewwaipet
21/4/2024
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், விசாரணை கைதி மரணம் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணையின்போது, கைதி சாந்தகுமார் உயிரிழக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நெஞ்சுவலி என்று கூறிய சாந்தகுமாரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை மேலும் கூறியதாவது:-
பிபிஜி சங்கர் கொலையில் முக்கிய குற்றவாளியான சாந்தகுமார், கடந்த 13ம் தேதி புட்லூர் பகுதியில் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மற்றொரு குற்றச்செயல் புரிய அவர்கள் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.
சாந்தகுமாரின் இறப்பின் மீது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு திருவள்ளூர் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.
சாந்தகுமாரின் மரணம் குறித்த விசாரணை நியாயமாக நடைபெற வேண்டி சாந்தகுமாரை விசாரித்த காவல் ஆய்வாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், சாந்தகுமாருக்கு இதயத்தில் ரத்த குழாய் அடைப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதி சாந்தகுமாரின் இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கையில் தான் தெரிய வரும்.
சாந்தகுமாரின் இறுதிச்சடங்குக்காக அவரது மனைவி மற்றும் உறவினர்கள், சாந்தகுமார் உடலை ஸ்ரீபெரும்புதூர் கொண்டு சென்றனர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.