குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா
1 min readChitra Poornami Festival at Courtalam Senpahadevi Amman Temple
24.4.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு செண்பகாதேவி அம்மனை வழிபட்டனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதியில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்கள்.
குற்றாலம் மெயின் அருவிக்கு மேலே மலைப்பகுதியில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி திருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா கடந்த 14ஆம் தேதி காலை அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நிகழ்த்தி நடைபெற்றது.
சித்ரா பௌர்ணமி தினமான நேற்று காலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அத்துடன் ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு 23 வகையான வாசனை திரவியங்களில் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனை நிகழ்ச்சியும், மதியம் உச்சிக்கால பூஜையும் நடைபெற்றது.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு புனித விரதம் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் ஏராளமான பெண்கள் அங்குள்ள ஔவையார் அம்மனுக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டனர். சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு செண்பகாதேவி அம்மன் கோவிலில் காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு குற்றாலம் செண்பகாதேவி அம்மன் மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு தமிழக முதல்வரின் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் தொடர்ச்சியாக நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவுபடி வனச்சரக அலுவலர் சீதாராமன் மேற்பார்வையில் குற்றாலம் பிரிவு வனவர் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பைகளை வழங்கினார்கள். மேலும் கோவிலுக்கு வருகை தந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகளை வனத்துறையின பெற்றுக் கொண்டு அவர்களுக்கு மஞ்சப்பை கொடுத்து அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் நீர்மோர் வழங்கப்பட்டது.
மேலும் செண்பகாதேவி அருவியில் நீர் மாசுபடுவதை தவிர்க்க ஆற்றிலும் செண்பகாதேதி அருவியிலும் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதித்திருந்து இருந்தனர.
குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவிலில் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி திருவிழாவில் தென்காசி கோட்டாட்சி தலைவர்
கு.பத்மாவதி, காவல் ஆய்வாளர் உமா, அகஸ்தியர் சன்மார்க்க சபை முத்துக்குமாரசாமி, முன்னாள் தென்காசி ஒன்றிய திமுக செயலாளர் குற்றாலம் பா.துரை (எ) இராமையா, தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் இலஞ்சி எஸ்.கே. சண்முகசுந்தரம், உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சிறப்பு அலங்கார தீபாராதனைகள், நள்ளிரவில் சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் மலைப்பாதையில் நடந்து சென்று செண்பகாதேவி அம்மனை வழிபட்டனர்.
சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு மேல் செண்பகாதேவி அருவிகள் அம்மனுக்கு தீர்த்தவாதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் அன்புமணி உதவியாளர் தங்கம் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். குற்றாலம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.