June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தான் பெண்ணுக்கு சென்னையில் மாற்று இருதய ஆபரேஷன்

1 min read

Heart transplant surgery for Pakistani woman in Chennai

25.4.2024
எல்லை தாண்டி இரக்கமற்று இந்தியர்களை கொன்று குவிக்கும் பாகிஸ்தானியர்கள் மீது ஆத்திரமும் கோபமும் இருந்தாலும் என்னை காப்பாற்றுங்கள் என்று வந்தால் எல்லைகளை கடந்து உயிர் கொடுத்தும் காப்பவர்கள் இந்தியர்கள் என்பதற்கு மேலும் ஒரு சாட்சிதான் இந்த சம்பவம்.

பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆயிஷா ரஷான் (வயது 19). இந்த இளம்பெண் இதய நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு சிகிச்சைக்காக இந்தியா வந்திருக்கிறார். அப்போது அடையார் மலர் ஆஸ்பத்திரியில் இதயவியல் நிபுணராக இருந்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் அவரது இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவ குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இதயத்தில் ஒரு பம்பை பொருத்துகிறார்கள். சிகிச்சைக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பிய ஆயிஷா தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்.

எம்.ஜி.எம். மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருந்த டாக்டர் பால கிருஷ்ணனை அணுகி பரிசோதனை செய்துள்ளார். அப்போது ஆயிஷாவின் இதய பம்பில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் காப்பாற்ற முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து இதய தானத்துக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி இருந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரி 31-ந்தேதி டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம் தானத்துக்கு கிடைத்து இருப்பதாகவும் சிகிச்சை பெற வரும்படியும் அழைத்துள்ளார்கள்.
ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.35 லட்சம் வரை ஆகலாம் என்று கூறியிருக்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது என்று தவித்துள்ளர்கள். கடைசியில் ஐஸ்வர்யா டிரஸ்டு மூலம் பண உதவியும் கிடைத்துள்ளது.
இதையடுத்து சென்னையில் எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அறுவை சிசிக்சை வெற்றிகரமாக முடிந்தது.
விரைவில் தாயகம் திரும்பவிருக்கும் ஆயிஷா தனது தாய் சனோபருடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது சனோபர் கூறியதாவது:-

“வெளிப்படையாகச் சொல்வதென்றால், இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானில் நல்ல மருத்துவ வசதிகள் இல்லை. இந்தியா மிகவும் நட்பாக இருப்பதாக உணர்கிறேன். இந்தியாவுக்கு வந்தபோது கிட்டதட்ட உயிர் போகும் நிலையில் தான் இருந்தது. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வசதி இல்லை என்று பாகிஸ்தானில் மருத்துவர்கள் கூறியபோது, நாங்கள் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணனை அணுகினோம். இதற்காக இந்தியாவுக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆயிஷா கூறும்போது கராச்சி திரும்பியதும் பள்ளி படிப்பை தொடர போவதாகவும், ஆடை வடிவமைப்பாளராக வர வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் குறிப்பிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *