சங்கரன்கோவில் அருகே மனைவி கொன்று கணவர் தற்கொலை
1 min readHusband commits suicide by killing his wife near Sankarankoil
26.4.2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் அருகே குடும்பத்தகராறில் மனைவியை உலக்கையால் அடித்துக்கொன்ற கணவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள தெற்கு பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 67).
இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 60) இவர்களுக்கு அழகர்சாமி (வயது 45), அய்யனார் (வயது 30), சமுத்திரகனி (வயது 27) ஆகிய 3 மகன்களும், காமாட்சி (வயது 40) என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். கருப்பசாமி, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். எனவே, சீதாலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கருப்பசாமி கடந்த சில நாட்களுக்கு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஊருக்கு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி மனைவி என்றும் பாராமல் உலக்கையை எடுத்து சீதாலட்சுமியின் தலையில் சரமாரியாக அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஆத்திரத்தில் மனைவியை அடித்துக்கொன்ற கருப்பசாமி, பின்னர் போலீசாரின் விசாரணைக்கு பயந்தும், தன்னை குடும்பத்தினர் அவ தூறாக பேசுவார்கள் என்று கருதியும் மனமுடைந்த நிலையில்
வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து விட்டு, மனைவியின் உடல் அருகிலேயே மயங்கி விழுந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.
நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் கருப்பசாமி- சீதாலட்சுமி தம்பதி வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் சீதாலட்சுமி பிணமாக கிடந்ததையும், அரு கில் கருப்பசாமி மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியவாறு கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது பற்றி திருவேங்கடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்த திருவேங்கடம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடிய கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்..
இந்நிலையில் திருவேங்கடம் போலீசார் சீதாலட்சுமியின் உடலைக் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.