நெல்லை ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
1 min read
Bomb threat to Nellai railway station
16.5.2024 நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு போன் மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நெல்லை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் உதவியுடன் நெல்லை ரெயில் நிலையம் முழுவதும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காட்சியளித்தது.இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சிவபெருமாள் என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் குடிபோதையில் வெடிகுண்டு இருப்பதாக போன் செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.