கங்கைகொண்டான் ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தர்ணா
1 min read
Load lifting workers at Gangaikonda railway station on a sudden dharna
9.7.2024
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சுமார் 100 ஆண்டுகளாக சரக்கு முனையம் செயல்பட்டு வந்தது.
கூட்ஸ் ரெயில் மூலம் கொண்டு வரப்படும் உரம், அரிசி, கோதுமை, நெல் உள்ளிட்டவைகள் இங்கிருந்து லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் சரக்கு முனையத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக கூறி, இந்த சரக்கு முனையத்தை சமீபத்தில் கங்கைகொண்டான் ரெயில் நிலையத்திற்கு இடமாற்றம் செய்தனர்.
நெல்லை சரக்கு முனையத்தில் சுமார் 120 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் தங்களுக்கு கங்கைகொண்டானில் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அவர்களுக்கு அங்கு பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கங்கை கொண்டான் சரக்கு முனையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள், லாரி டிரைவர்கள் ஆகியோர் சந்திப்பு ரெயில் நிலையத்தில் பணியாற்றிய பணியாளர்களை கங்கை கொண்டானில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி இன்று கங்கைகொண்டான் ரெயில் நிலையம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தர்ணா போராட்டத்தில் வட்டார லாரி சங்க தலைவர் அலெக்ஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பொருளாளர் இஸ்ரவேல், மாரிமுத்து, செந்தில் குமரன், முருகன், ஆறுமுகம், வட்டார விவசாய சங்க தலைவர் இலோசியஸ், ஊர் நாட்டாண்மை துரைப் பாண்டியன், பஞ்சாயத்து தலைவர்கள் கவிதா பிரபாகரன், புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் ராமர், மானூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் மகேஷ் குமார், விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும் போது, நாங்கள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சரக்கு முனையம் செயல்பட்ட போது பணிக்கு சென்ற நிலையில் அங்குள்ள தொழிலாளர்கள் எங்களை அனுமதிக்கவில்லை.
கங்கைகொண்டானை சுற்றியுள்ள 21 கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். அவர்களை இங்கே அனுமதித்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அவர்களை இங்கு அனுமதிக்க கூடாது. அதனை மீறி அனுமதித்தால் நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
தகவல் அறிந்ததும் தாழையூத்து டி.எஸ்.பி. பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வருவாய் ஆய்வாளர் அமுதா, தாசில்தார் ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரி உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.