நெல்லையில் மத்திய அரசை கண்டித்து ரயில்மறியல்-48 வக்கீல்கள் கைது
1 min read
Rail strike in Nella to condemn central government- 48 advocates arrested
11.7.2024
நெல்லையில் மத்தி்ய அரசின் புதிய சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், அதில் உள்ள இந்தி மற்றும் சமஸ்கிருத வார்த்தைகளை அகற்றக் கோரியும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 48 வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு திமுக , காங்கிரஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்
நெல்லையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான கண்டன போராட்டம் நெல்லை வழக்கறிஞர் சங்க தலைவர் எஸ்.ஆர்.ராஜேஸ்வரன், செயலாளர் வ.மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் துணைத்தலைவர் வினோத் குமார் உதவி செயலாளர் முத்துராஜ், நூலகர் அனுபிரவீன், பொருளாளர் எஸ்.கே.ராஜா, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் மதிமுக வழக்கறிஞர் ம.சு.சுதர்சன் . ரமேஷ். செல்வம். ப.செந்தில் குமார். பேச்சிமுத்து. ஜில்லா ராஜா உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பிய வழக்கறிஞர்கள் திடீரென நெல்லை ரயில் நிலையத்திற்குள் நுழைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழக்கறிஞர்களை
நுழைவாயிலில் பேரிகார்டுகள் மூலம் தடுத்து நிறுத்தினார்கள் இதனால் வழக்கறிஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரை மீறி வக்கில்கள் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 48 வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரூபிமனோகரன் . பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வஹாப். அ.தி.மு.க மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.முடிவில் மதிமுக வழக்கறிஞர் நெல்லை ம.சு.சுதர்சன் அனைவருக்கும் நன்றி கூறினார்.