குற்றாலத்தில் சாரல் திருவிழா நிறைவு விழா
1 min read
Charal festival closing ceremony at Courtalam
20.8.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சாரல் திருவிழாவின் நிறைவு நாள் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் .கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் குறிப்பாக சுற்றுலாத்துறை ஒரு முன்னுரிமை பெற்ற துறையாகச் செயல்பட ஆரம்பித்தது. தமிழகத்திலுள்ள சுற்றுலா வளங்களை உலகில் பல பகுதிகளிலும் தெரியும் வண்ணம் விளம்பரங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உள் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து அடிப்படை வசதிகளை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சுற்றுலாத் துறைக்கு கூடுதல் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இதனால் தமிழக சுற்றுலாத் துறையின் வரலாற்றில் ஒருதிருப்பு முனையாக தனது பணிகளைச் செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் நோக்குடன் சாரல் திருவிழா வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வருடம் சாரல் திருவிழா 16.08.2024 முதல் 19.08.2024 வரை 4 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் போது நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளான படகுப்போட்டி, நீச்சல்போட்டி, கோலப்போட்டி, கொழுகொழு குழந்தைகள் போட்டி, சுற்றுச்சூழல் குறித்த ஓவியப்போட்டி, ஆணழகன் போட்டி, யோகா, மினி மாராத்தான் மற்றும் வில்வித்தை போட்டிகள் மற்றும் பல்வேறு கண்காட்சியும் நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, மண்டல கலை பண்பாட்டு மையம், திருநெல்வேலி உதவி இயக்குநர் வ.கோபால கிருஷ்ணன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) அ.வில்லியம் ஜேசுதாஸ். மாவட்ட சுற்றுலா அலுவலர் க.சீனிவாசன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.