பொன்னேரி அருகே ரெயில் விபத்து-கவனக்குறைவு காரணம்
1 min read
Train accident near Ponneri-caused by carelessness
12.10.2024
மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கவனக்குறைவே ரெயில் விபத்திற்கு காரணம் என ரெயில்வே இருப்புப்பாதை போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே விரைவு ரெயில் சரக்கு ரெயில் மீது மோதி விபத்து நிகழ்ந்ததற்கு கவனக்குறைவே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரெயில்வே இருப்புப்பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதால் மட்டுமே ரெயிலை இயக்கியதாக பாக்மதி விரைவு ரெயிலை ஓட்டிய லோகோ பைலட் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.
ரெயில் விபத்து தொடர்பாக கவரப்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் மணிபிரசாத் பாபு கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.