ரத்தன் டாடா பெயரில் பல்கலைக்கழகம்: மராட்டிய அரசு அறிவிப்பு
1 min read
Ratan Tata University: Maharashtra Govt Notification
14/10/2024
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது 86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர். உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு ரத்தன் டாடா உடலுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா. மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே , மத்திய மந்திரிகள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மறைந்த ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மராட்டிய மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்திற்கு ரத்தன் டாடா பெயர் சூட்டப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். அதன்படி இப்பல்கலைக்கழகம் இனிமேல் ரத்தன் டாடா மராட்டிய மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும்.
மராட்டிய திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.