கனடா பிரதமர் பதவி விலக கட்சியினர் கெடு
1 min read
Canada’s Prime Minister’s resignation party is bad
24.10.2024
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அக்.,28ம் தேதிக்குள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவரது சொந்த கட்சி எம்.பி.,க்கள் கெடு விதித்துள்ளனர்.
கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் நேரடியாக குற்றம் சாட்டியதால் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியல் ஆதாயங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிதைத்துவிட்டதாக இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இது ஒரு புறம் இருந்தாலும், கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு சொந்தக் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று நடந்த லிபரல் கட்சி எம்.பி.,க்களின் ரகசிய கூட்டத்தில் ட்ரூடோவும் கலந்து கொண்டார். அப்போது, ஒவ்வொரு எம்.பி.,க்களுக்கும் பேச இரண்டரை நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது.
அதனைப் பயன்படுத்தி பேசிய எம்.பி.,க்கள், ட்ரூடோ மீதான அதிருப்தி மற்றும் குறைகளையும் வெளிப்படையாக கூறினர். மேலும், ட்ரூடோ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 24 எம்.பி.,க்கள் கையெழுத்திட்ட கடிதமும் கொடுக்கப்பட்டது.
அதில், வரும் அக்டோபர் 28ம் தேதிக்குள் ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ராஜினாமா செய்யாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.