June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

அதானி விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்

1 min read

Adani case: Public interest litigation filed in Supreme Court

24.11.2024
இந்தியாவின் பிரபல தொழில் அதிபரும், உலகின் முன்னணி பணக்காரருமான கவுதம் அதானி, இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் ஏராளமான தொழில்களை நடத்தி வருகிறார். ஏராளமான வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அவரது நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.
அந்தவகையில் அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை வினியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, காஷ்மீர், சத்தீஷ்கார் மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளார் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இதை மறைத்து அமெரிக்கர்களிடம் இருந்து அதிகளவிலான முதலீடுகளை பெற்றுள்ளதாகவும், இது அமெரிக்க சட்டத்துக்கு எதிரானது என்றும் அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்.இ.சி.) சார்பில் நியூயார்க் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் அதானியின் மருமகனும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவன செயல் இயக்குனருமான சாகர் அதானி உள்பட 7 பேர் மீதும் லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பாக தனித்தனியாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது. குறிப்பாக இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. தொழில் அதிபர் அதானியை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
இந்த சூழலில் நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அதானி மற்றும் அவரது மருமகன் சாகருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நியூயார்க் கோர்ட்டு மூலம் அனுப்பப்பட்ட இந்த சம்மனுக்கு பதிலளிக்க தவறினால், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தங்கள் மீதான இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அதானி குழுமம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அதானி – ஹிண்டன்பர்க் தொடர்பான வழக்கில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் விவகாரத்திற்கும் தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேச நலனை கருத்தில் கொண்டு உடனடியாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் விஷால் திவாரி தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *