கே.வி.தங்கபாலுவுக்கு “பெருந்தலைவர் காமராசர் விருது”: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
1 min read
“Perunthalaivar Kamaraj Award” for K.V. Thangapalu: Tamil Nadu government announcement
7.1.2025
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித் திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாகத் தமிழ்ச் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்து வரலாறு படைத்த பெருந்தலைவர் அவர்களின் அடிச்சுவட்டில் தொண்டாற்றி வரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது 2006ஆம் ஆண்டு முதல் வழங்கப் பெற்று வருகிறது. 18 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளராகவும், கட்சித் தலைவராகவும், மத்திய இணை மந்திரியாகவும் , ஒரு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியதோடு கடந்த 50 ஆண்டு காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டுவரும் கே.வி.தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் விருது பெறும் விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்.
இவ்விருது தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களால் திருவள்ளுவர் திருநாளான 15.1.2025 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .